தாட்கோ வாயிலாக ரூ.9.38 கோடி கடன் தொழில் முனைவோராக மாறிய 135 பேர்
கோவை: தாட்கோ மூலம் முதல்வரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார முன்னேற்ற திட்டத்தின் கீழ் கடந்த இரண்டு ஆண்டுகளில் 135 நபர்களுக்கு 9.38 கோடி ரூபாய் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் பொருளாதாரத்தில், முன்னேற்றம் அடையும் வகையில் தமிழக முதல்வரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூக பொருளாதார முன்னேற்ற திட்டத்தின் கீழ் தாட்கோ வழியே, பல்வேறு பொருளாதார மேம்பாட்டு திட்டங்களை, தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. 35 சதவீத மானியம் அல்லது அதிக பட்சம் ரூ.3.50 லட்சம் வரை, மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில் தாட்கோ வாயிலாக கடந்த இரண்டு நிதியாண்டுகளில், 135 நபர்களுக்கு ரூ.9.38 கோடி மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா வாகனம், பயனியர் ஆட்டோ, மாடு, ஆடு பண்ணை, கான்கிரீட் கலவை இயந்திரம், செங்கல் தயாரிக்கும் இயந்திரம், துணிக்கடை, உணவகம், ஸ்டுடியோ ஆகியவை அமைத்து, தொழில் முனைவோராக மாறியுள்ளனர்.