| ADDED : ஜன 28, 2024 11:19 PM
மேட்டுப்பாளையம்:கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகம் லிங்காபுரம், பெத்திக்குட்டை, கூத்தாமண்டி, மூலையூர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகம் காணப்படும்.வனவிலங்குகளின் தாக்கம் போக்க 20க்கும் மேற்பட்ட செயற்கை தண்ணீர் தொட்டிகள் வனப்பகுதிக்குள் அமைக்கப்பட்டுள்ளன.சிறுமுகை வனப்பகுதியில் ஓடந்துறை காப்புக்காடு லிங்காபுரம் அருகே தனிநபர் விவசாய நிலத்தில் கீழே விழுந்த 25 வயது பெண் யானை ஒன்றுக்கு இரண்டு நாட்களாக தொடர் சிகிச்சையளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த யானை கடந்த 26ம் தேதி உயிரிழந்தது. அதன் உடற்கூறு ஆய்வில், கல்லீரல் கோளாறு காரணமாக இறந்துள்ளது என தெரிய வந்துள்ளது.அதேபோல், கூத்தாமண்டி அருகே மூலையூரில் 41 வயது பெண் யானை இறந்து கிடந்தது. அதன் உடற்கூறு ஆய்விலும் கல்லீரல் கோளாறு காரணமாக இறந்துள்ளது என தெரிய வந்தது.இம்மாதத்தில் மட்டும் சிறுமுகையில், 2 பெண் யானைகள் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளது வன ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.யானைகளின் இறப்பை தடுக்க சிறுமுகை வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து சிறுமுகை வனச்சரகர் மனோஜ் கூறுகையில், ''இரண்டு பெண் யானைகள் இறந்தது தொடர்பாக கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.உடற்கூறு ஆய்வுகளில் சில மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, லேப் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் துல்லியமாக எதனால் யானைகளுக்கு உடல் நலக்குறைவுஏற்பட்டுள்ளது என தெரியவரும்.அதன் படி யானைகள் இறப்பை தடுக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும். சிறுமுகை வனச்சரகம் மிகவும் இயற்கை வனப்பகுதி. இங்கு தொழிற்சாலைகள் மிகவும் குறைவு.பவானிசாகர் அணையின் நீர்தேக்க பகுதி என்பதால் வறட்சியும் குறைவு. எனினும் வனத்தில் மாசு ஏற்பட்டுள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்படும்.இங்கு உள்ள யானைகள் அனைத்தும் கண்காணிக்கப்படும்,'' என்றார்.