போக்குவரத்து நெரிசல் தவிர்க்க மையத்தடுப்பு அமைக்கணும்!
வால்பாறை, ;வால்பாறையில், அடிக்கடி நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், ரோட்டில் மையத்தடுப்பு அமைக்க வேண்டும்.வால்பாறைக்கு சுற்றுலா பயணியர் அதிகளவில் வருகின்றனர். இந்நிலையில், ரோட்டின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளாலும், சுற்றுலா வருவோரின் வாகனங்கள் நிறுத்தப்படுவதாலும், போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் ஏற்படுகிறது.இதனால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் செல்லும் வழி, பழைய பஸ் ஸ்டாண்ட், காந்திசிலை ஆகிய பகுதிகளை மக்கள் எளிதாக கடந்து செல்ல முடிவதில்லை.பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்ற போலீசாரும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதால், நாளுக்கு நாள் ஆக்கிரமிப்புக்கள் அதிகரித்து வருகின்றன.பொதுமக்கள் கூறுகையில், 'வால்பாறையில் கடந்த, 10 ஆண்டுகளுக்கு மேலாக போக்குவரத்து நெரிசல் தீராத பிரச்னையாக உள்ளது. நிரந்தர தீர்வு காணும் வகையில், போஸ்ட் ஆபீஸ் முதல் ஸ்டேன்மோர் சந்திப்பு சாலை வரை, நெடுஞ்சாலைத்துறை சார்பில் மையத்தடுப்பு அமைக்க வேண்டும்,' என்றனர்.