ஒரு கையெழுத்து... மாறி விடும் தலையெழுத்து! உங்களுக்கும் சிபில் ஸ்கோர் குறைய வாய்ப்பிருக்கிறது
கோவை : 'கடன் பெறும் நபருக்கு, ஜாமின் கையெழுத்து போடும் போது, கவனமாக இருக்க வேண்டும்; தவறினால், ஜாமின் கையெழுத்திட்டவரின் சிபில் ஸ்கோர் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது' என, வங்கியாளர்கள் எச்சரிக்கின்றனர்.இந்திய ரிசர்வ் வங்கி உரிமம் பெற்ற, நான்கு கடன் தகவல் நிறுவனங்களில் 'கிரெடிட் இன்பர்மேஷன் பீரோ (இந்தியா) லிமிடெட் (சிபில்)' மிகவும் பிரபலம். சிபில் மதிப்பெண்
கடன் விண்ணப்பத்துக்கான நடவடிக்கையில், சிபில் மதிப்பெண் முக்கிய பங்கு வகிக்கிறது. முதலில், விண்ணப்பதாரரின் இந்த மதிப்பெண் தான் சரிபார்க்கப்படும். சிபில் மதிப்பெண் குறைவாக இருந்தால், கடன் விண்ணப்பம் பரிசீலிக்கப்படாமல் போகலாம்.உங்கள் கடன்களின் தவணை அல்லது கிரெடிட் கார்டு பில்களை, சரியான நேரத்தில் செலுத்த தவறினாலோ அல்லது தாமதம் செய்தாலோ, உங்கள் சிபில் ஸ்கோர் பாதிக்கப்படும்.இந்நிலையில், வங்கி, நிதி நிறுவனங்களில் ஒருவர் கடன் வாங்குகிறார் என்றால், அவருக்கு நன்கு தெரிந்தவரிடம் ஜாமின் கையெழுத்து பெறுவார்கள். அவரிடம் இருந்து, ஆதார் மற்றும் பான் கார்டின் நகல் பெறுவார்கள். ஜாமின் பின்னணி
'வாடிக்கையாளர் வாங்கிய கடனை முறையாக திருப்பிச் செலுத்த தவறும் பட்சத்தில், நான் அந்தக் கடனை திருப்பிச் செலுத்தி விடுகிறேன்' என்று, வாடிக்கையாளர் சார்பாக, வங்கிக்கு ஒருவர் உத்தரவாதம் அளிப்பது' தான், ஜாமின் கையெழுத்து பெறுவதன் நோக்கம். வாடிக்கையாளர் வங்கிக் கடனை சரியாக திருப்பிச் செலுத்தவில்லை என்றால், ஜாமின்தாரர் மீதும் வங்கிகள் நடவடிக்கை எடுக்க முடியும். கடன் பெற்றவர் கடனைத் திருப்பி செலுத்தும் வரையில், ஜாமின் கையெழுத்திட்டவர்களுக்கும், அதன் மீதான பொறுப்பு இருந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில், 'சிபிஸ் ஸ்கோர்' நிறைவாக இருக்கிறது என்று கணக்கிட்டு கொண்டாலும், கடன் வாங்கிய நபர், தவணை தொகையை சரியாக செலுத்தாமல் இருந்தால், ஜாமின் கையெழுத்து இட்டவரின் சிபில் ஸ்கோரும் குறையும் என்று, எச்சரிக்கை விடுகின்றனர், வங்கியாளர்கள் சிலர். ஜாக்கிரதை!
ஜாமின் கையெழுத்து இட்டவர், அவருக்கு வங்கியிலோ, நிதி நிறுவனங்களிலோ கடன் பெறும் சூழல் ஏற்பட்டால், சிபிஸ் ஸ்கோர் குறைந்ததற்கான காரணம் அப்போது தான் தெரியவரும். எனவே, குறிப்பிட்ட நபரின் நேர்மையை ஆராய்ந்து, ஜாமின் கையெழுத்து போடும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கின்றனர் வங்கியாளர்கள்.
கவனமாக இருக்க வேண்டும்'
போத்தனுாரை சேர்ந்த, கனரா வங்கியின் முன்னாள் அதிகாரி மேத்சன் கூறுகையில், ''கடனுக்கு விண்ணப்பித்த நபர், சரியாக தவணை தொகையை கட்டுகிறாரா என்று பார்க்க வேண்டும். தவணை தொகை சரியாக செலுத்தவில்லை என்றால், ஜாமின் கையெழுத்து இட்டவருக்கும் சிபில் ஸ்கோர் குறையும். இடையிடையே கட்டாமல் விட்டு, ஒரு கட்டத்தில், முழு கடனை கட்டி விட்டாலும், சிபில் ஸ்கோர் உயர குறைந்தபட்சம் 6 மாதங்களாகும். கடன் வாங்கும் நபருக்கு, ஒருவர் ஜாமின் கையெழுத்து போடும் பட்சத்தில், கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்,'' என்றார்.