உழவர் சந்தைக்கு விவசாயிகள் வருகை; சிறப்பு முகாம் நடத்தும் வேளாண் துறை
கோவை, ;உழவர் சந்தைகளை விவசாயிகள் அதிகளவில் பயன்படுத்தும் வகையில், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்படுகிறது. கோவையில் ஆர்.எஸ்.புரம், சிங்காநல்லுார், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், குறிச்சி, சுந்தராபுரம், சூலுார், வடவள்ளி ஆகிய எட்டு இடங்களில் உழவர் சந்தைகள் செயல்படுகின்றன. எட்டு சந்தைகளிலும் சேர்த்து, 634 கடைகள் நடத்தப்படுகின்றன. நாளொன்றுக்கு, 180 டன் காய்கறிகள் விற்கப்படுகின்றன. உழவர் சந்தைகள் காலை, 6:00 முதல் 11:00 மணி வரை செயல்படுகின்றன. கோவை, ஊட்டி உட்பட, 970 விவசாயிகள் இங்கு காய்கறிகளை நேரடியாக விற்பனை செய்து வருகின்றனர்.வேளாண் விற்பனை மற்றும் வணிக துணை இயக்குனர் மீனாம்பிகை கூறியதாவது:கோவையில் செயல்படும் எட்டு உழவர் சந்தைகளில், 970 விவசாயிகள் நேரடியாக காய்கறி விற்பனை செய்கின்றனர். காலை நேரத்தில் காய்கறி, பழங்கள் பிரஷ் ஆக கிடைக்கும் என்பதால் மக்கள் ஆர்வமாக வாங்குகின்றனர். வரத்து குறைவாக உள்ள உழவர் சந்தைகளை பட்டியல் எடுத்துள்ளோம். குறிச்சி உழவர் சந்தையில், 2 டன், சுந்தராபுரம், பொள்ளாச்சி உழவர் சந்தைகளில் 10-11 டன் வரத்துள்ளன. பிற சந்தைகளில், 50-55 டன் வரத்துள்ளன.வரத்து குறைவான சந்தைகளுக்கு உட்பட்ட எல்லைகளில் ஒவ்வொரு சனிக்கிழமையும் நேரடியாக விவசாயிகளது இடங்களுக்குச் சென்று முகாம் நடத்துகிறோம். தோட்டக்கலைத்துறையினர் ஒத்துழைப்பு அளிக்கின்றனர்.உழவர் சந்தை செயல்பாடுகள், விலை நிர்ணயம் சார்ந்த விபரங்களை விளக்குகிறோம். விவசாயிகள் தங்களது விளைபொருட்களை மக்களுக்கு நேரடியாக விற்பதால் நல்ல விலை பெறலாம் என்பதால், அருகில் உள்ள உழவர் சந்தையை அணுகலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.