கோவை;பொது சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கும் வகையில் குப்பை கொட்டிவந்த, 200க்கும் மேற்பட்ட இடங்களில் பூக்கோலமிட்டும், வலைகள் கட்டியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.மாநகராட்சி பகுதிகளில் மக்கும் குப்பை, மக்காதது என தினமும், 1,250 டன் வரையிலான குப்பை சேகரமாகிறது. திடக்கழிவு மேலாண்மை பணிகளை, தனியார் மேற்கொண்டது முதல் வார்டுகளில் குப்பை தேக்கம் அதிகரித்துள்ளதாக, கவுன்சிலர்கள் குமுறிவருகின்றனர்.எனவே, பழையபடி மாநகராட்சியே குப்பை சேகரிப்பு பணியை மேற்கொள்ள வலியுறுத்தி வருகின்றனர். குப்பையை தரம் பிரிக்காமல், திறந்த வெளியில் கொட்டுவதும் குப்பை மேலாண்மைக்கு சவாலாக உள்ளது. இதை தடுக்க, துாய்மை பணியாளர்கள் வீடு தோறும் சென்று தரம் பிரித்து சேகரித்து வருகின்றனர்.தரம் பிரித்து தராமல், திறந்து வெளியில் கொட்டினால் பொது மக்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ரோட்டில் குப்பை கொட்டுவதை தவிர்க்க, குப்பை தொட்டிகளை குறைக்கும் நடவடிக்கையிலும் மாநகராட்சி இறங்கியுள்ளது.திறந்த வெளியில் குப்பை கொட்டும் இடங்களை கண்டறிந்து, தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், சுகாதார பிரிவினர் முடுக்கிவிடப்பட்டுள்ளனர். இவ்வாறு இதுவரை, 200 இடங்கள் கண்டறியப்பட்டு மீண்டும் அங்கு குப்பை கொட்டாதிருக்க பூக்கோலமிட்டும், வலைகள் கட்டியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
'எனது நகரம் எனது பெருமை'
மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ஒருவர் கூறுகையில், 'இதுவரை, 200க்கும் மேற்பட்ட இடங்களில் வலை கட்டியும், பூக்கோலமிட்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த இரு வாரத்தில், 50க்கும் மேற்பட்ட இடங்களில், இந்நடவடிக்கை எடுத்துள்ளோம். இன்று(நேற்று) 68வது வார்டு, சிவானந்தா காலனி பஸ் ஸ்டாப் அருகே இருந்த இரு குப்பை தொட்டிகள் அகற்றப்பட்டு, அங்கு பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 'எனது நகரம் எனது பெருமை' என்பதை மையமாக கொண்டு, சுகாதார பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது' என்றார்.