மீண்டும் தபால் ஏ.டி.எம்., திறக்கும் ஏற்பாடு தீவிரம்
கோவை; தற்காலிகமாக மூடப்பட்டிருந்த தபால் ஏ.டி.எம்.,கள், விரைவில் திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரவுள்ளன.தபால் நிலையங்களில் உள்ள ஏ.டி.எம்., இயந்திரங்கள், சில நாட்களாக செயல்படவில்லை. இதற்கான அறிவிப்பு, தபால் ஏ.டி.எம்., ஷட்டரில் ஒட்டப்பட்டிருந்தது.ஏ.டி.எம்., கார்டுகள் புதுப்பிக்கப்படாதது, ஏ.டி.எம்., இயந்திரங்கள் செயல்படாதது போன்றவற்றால், ஏ.டி.எம்., சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டு விடுமோ என்ற அச்சம், வாடிக்கையாளர்கள் பலர் மத்தியில் எழுந்தது.தற்போது, ஏ.டி.எம்., கார்டுகள் வினியோகம் துவங்கியுள்ள நிலையில், ஏ.டி.எம்.,களும் விரைவில் திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தபால் துறை அதிகாரிகள் கூறியதாவது: தபால் ஏ.டி.எம்.,களில் பணம் நிரப்புவது மற்றும் நிர்வகிப்பது போன்ற பணிகளை மேற்கொண்டு வந்த தனியார் நிறுவனம், சில நெருக்கடியில் சிக்கியது. இதனால், தபால் ஏ.டி.எம்.,களில் பணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டதால், அவை தற்காலிகமாக மூடப்பட்டன. தற்போது, மற்றொரு தனியார் நிறுவனத்துக்கு இப்பணி வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் பணிகளை துவக்கியுள்ளனர்.தபால் ஏ.டி.எம்.,களில், பழைய நிறுவனத்தினர் வைத்திருந்த இயந்திரங்களை மாற்றி, புதிய இயந்திரங்களை வைக்க வேண்டியுள்ளது. இப்பணிகள் முடிந்தவுடன், விரைவில் தபால் ஏ.டி.எம்.,கள் செயல்பட ஆரம்பிக்கும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.