மில்லேனியல் சிட்டியில் பிரமிப்பு; தினமலர் கோலப்போட்டியில் வாசகியர் வேற லெவல்
பெ.நா.பாளையம்; தெய்வீக மாதமான மார்கழியில் அதிகாலை நேரத்தில் வண்ண, வண்ண கோலங்கள் வரைந்து 'தினமலர்' வாசகியர் அசத்தினர்.கோவையில் 'தினமலர்' மற்றும் தி சென்னை சில்க்ஸ் ஸ்ரீ குமரன் தங்க மாளிகை சார்பில், 'மார்கழி விழாக்கோலம்' கோலப்போட்டி, நடந்து வருகிறது.அபார்ட்மென்டுகளில் வசிக்கும் 'தினமலர்' வாசகியர், போட்டியில் கலந்து கொண்டு புள்ளி கோலம், பூக்கோலம், ரங்கோலி என பல்வேறு வண்ணக் கோலங்கள் போட்டு, பரிசுகளை அள்ளி வருகின்றனர். மில்லேனியல் சிட்டி அபார்ட்மென்டில்...
கோவை மேட்டுப்பாளையம் ரோடு, துடியலூர் அருகே வெள்ளக்கிணறு பிரிவில் உள்ள மில்லேனியல் சிட்டி அபார்ட்மென்டில் நடந்த கோலப்போட்டியில், 30 வாசகியர் பங்கேற்றனர்.இதில் ரங்கோலி, 24 பேரும் புள்ளிக்கோலம், 6 பேரும் போட்டு அசத்தினர். மார்கழி உற்சவத்தை போற்றும் வகையில், வாசகி சுவாதி வரைந்த ஆண்டாள் திருக்கோலம், அனைவரையும் கவர்ந்தது. வாசகி சவுமியா, எதிர்வரும் பொங்கல் பண்டிகையை நினைவூட்டும் வகையில், பொங்கல் பானை, மயில், கரும்பு கோலம் வரைந்து இருந்தார். வாசகி சுமதி, கையில் விளக்குடன் பெண் ஒருவர் நிற்பதைப் போல வரைந்த கோலம் காண்போரை கவர்ந்தது. தண்ணீர் சேமிப்பு, அதனால் மரம், செடி, கொடிகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தும் கோலங்கள், அனைவரையும் கவர்ந்தது.புள்ளிக்கோல போட்டியில், வாசகியர் இந்து, பத்மா, ஜெயந்தி ஆகியோர் பரிசு பெற்றனர். ரங்கோலி கோல போட்டியில் வாசகியர் சுமதி, சுவாதி, புவனேஸ்வரி ஆகியோர் பரிசு பெற்றனர். சவுமியா, நிவேதா, செல்லம்மாள் ஆகியோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.பரிசளிப்பு விழாவில், மில்லேனியல் சிட்டி அபார்ட்மென்ட் தலைவர் தங்கேஸ்வரன், உறுப்பினர்கள் ஜெயந்தி, கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கினர்.மார்கழி விழாக்கோல போட்டிகளை, எல்ஜி அல்ட்ரா மேடு பெர்பெக்ட்லி மற்றும் ஸ்ரீ பேபி பிராப்பர்ட்டீஸ் நிறுவனத்தினர் இணைந்து வழங்கினர்.