பி.ஏ.பி., 3ம் மண்டலத்துக்கு 29ல் நீர் திறக்க முடிவு திட்டக்குழு கூட்டத்தில் தீர்மானம்
பொள்ளாச்சி: 'திருமூர்த்தி அணையில் இருந்து, மூன்றாம் மண்டல பாசனத்துக்கு, ஜன.,29ம் தேதி தண்ணீர் திறக்க அரசுக்கு கருத்துரு அனுப்ப வேண்டும்,' என, திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.திருப்பூர் மாவட்டம், உடுமலை திருமூர்த்தி அணையில் இருந்து, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு நான்கு மண்டலமாக பிரிக்கப்பட்டு, பாசனத்துக்கு நீர் வழங்கப்படுகிறது.நடப்பாண்டு எதிர்பார்த்தது போன்று பருவமழை கை கொடுத்ததால், பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகள் நிரம்பியது.பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியதால், பெருவாரிப்பள்ளம், துாணக்கடவு வழியாக சர்க்கார்பதிக்கு நீர் திறக்கப்பட்டு, அங்கு மின் உற்பத்தி செய்து, காண்டூர் கால்வாய் வழியாக நீர் திருமூர்த்தி அணைக்கு கொண்டு செல்லப்பட்டது.அங்கு நீர் இருப்பு வைத்து, இரண்டாம் மண்டல பாசனத்துக்கு ஐந்து சுற்று நீர் வழங்கப்படுகிறது; வரும், ஜன.,6ம் தேதியுடன் இரண்டாம் மண்டலம் முடிவடைகிறது.இதையடுத்து, திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு கூட்டம், பொள்ளாச்சி பி.ஏ.பி., கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் பரமசிவம் தலைமை வகித்தார். நீர்வளத்துறை தலைமை பொறியாளர் முருகேசன், கண்காணிப்பு பொறியாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயற்பொறியாளர்கள், நீர்வளத்துறை அதிகாரிகள், திட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.திருமூர்த்தி நீர்த்தேக்க திட்டக்குழு தலைவர் கூறியதாவது:இரண்டாம் மண்டல பாசன சுற்று முடிந்ததும், கோர்ட் உத்தரவுப்படி வெள்ளகோவில் பகுதியில் உள்ள வட்டமலைகரை அணைக்கு, 10 நாட்களுக்கு தண்ணீர் வழங்கப்பட உள்ளது. தொடர்ந்து, கால்வாய் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.இதன்பின், மூன்றாம் மண்டல பாசனத்துக்கு வரும் ஜன., மாதம், 29ம் தேதி முதல் ஐந்து சுற்று, 10,300 டி.எம்.சி., தண்ணீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதன் வாயிலாக, 95 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும். இதற்கு அதிகாரிகள், அரசுக்கு கருத்துரு அனுப்பி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.இவ்வாறு, கூறினார்.
தண்ணீர்!
வடசித்துார் பகுதியில் வறட்சியாக உள்ளதால், கோதவாடி குளத்துக்கு தண்ணீர் வழங்க அமைச்சர் செந்தில்பாலாஜி, எம்.பி., ஈஸ்வரசாமி, மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.பி.ஏ.பி., பாசன திட்ட அணைகளில் தற்போது நீர் இருப்பு திருப்தியாக உள்ள சூழலில், கோதவாடி குளத்துக்கு தண்ணீர் வழங்குவது குறித்து முடிவு செய்ய அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டதாக திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் வலியுறுத்தினார்.