மாணவ, மாணவியரே தைரியமா இருங்க! பிரச்னைகள் வரும், போகும். . தற்கொலை எதற்கும் தீர்வல்ல!
கோவை : பள்ளி, கல்லுாரி மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் அதிகரித்து வருகிறது. எதையும் எதிர்கொள்ளும் மனோபாவம் மாணவர்கள் மத்தியில் குறைந்து வருகிறதா என்ற கேள்வியை, இந்த சம்பவங்கள் எழுப்புகின்றன.பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மனதில் கல்வி, அறிவு, விளையாட்டு என வளர்ச்சியை நோக்கி செல்லும் எண்ணம் இருக்க வேண்டும். முக்கியமாக மனோதிடம் வேண்டும்.பிரச்னைகளை எதிர்கொள்ளும் பக்குவம் வர வேண்டும். ஆனால், தற்போது உள்ள மாணவர்கள் சிறு சிறு பிரச்னைகளுக்கு கூட, தங்களின் வாழ்வை முடித்துக்கொள்ளும் முடிவுக்கு செல்கின்றனர். இரு தற்கொலைகள்
சமீபத்தில், மாநகர பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லுாரியில், சக மாணவியின் பணம் திருட்டு போனது குறித்து, முதல்வர், பேராசிரியர்கள் விசாரித்ததால் மனமுடைந்து, முதலாம் ஆண்டு ஹெல்த் சயின்ஸ் படித்து வந்த மாணவி, நான்காவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.இதேபோல், கடந்த சில நாட்களுக்கு முன், தனது ஜூனியர் மாணவனை கேன்டீன் அழைத்துச் சென்றதை கண்டித்ததால், தனியார் பார்மசி கல்லுாரி இரண்டாம் ஆண்டு மாணவர், தற்கொலை செய்து கொண்டார். இந்த வரிசையில், தாய், தந்தை கண்டித்ததால், மொபைல் கொடுக்காததால் என சிறு சிறு காரணங்களுக்காக, மாணவர்கள் தங்களின் உயிரை மாய்த்துக்கொள்வது அதிகரித்து வருகிறது. கடந்தாண்டு 34 பேர்
2024ம் ஆண்டு பல்வேறு காரணங்களுக்காக, 430க்கு மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டனர். அதில் 34 பேர் பள்ளி, கல்லுாரி மாணவர்கள்.அதில் பெற்றோர் திட்டியதற்காக 11 மாணவர்கள், உடல் நலம் காரணமாக 11 பேர், காதல் பிரச்னையில் நான்கு பேர், குடும்ப பிரச்னையில் 3 பேர், தேர்வில் தோற்றதற்காக ஒருவர், மன அழுத்தம் காரணமாக 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர். கடந்தாண்டு முழுவதும், 34 பேர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், இந்தாண்டு, முதல் மூன்று மாதங்களிலேயே 11 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளது, அதிர்ச்சி அளிக்கிறது. தற்கொலை தீர்வாகாது
இது குறித்து, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் கூறியதாவது:ஒரு விஷயத்தை ஒவ்வொருவரும், ஒவ்வொரு விதத்தில் எடுத்துக்கொள்வார்கள். ஆசிரியர் திட்டுவதை, கண்டிப்பதை நல்ல முறையில் எடுத்துக்கொள்ளும் மாணவர்களும் உள்ளனர். அதில் மனமுடைந்து தவறான முடிவு எடுக்கும் மாணவர்களும் உள்ளன. எந்த பிரச்னைக்குமே, தற்கொலை தீர்வாகாது.இது மிகவும் கவனமாக கையாள வேண்டிய ஒன்று. இரண்டுக்கும் நடுவில், ஒரு சிறிய கோடு தான் உள்ளது. ஆசிரியர்கள், பேராசிரியர்கள், மாணவர்களுடன் சகஜமாக பழக வேண்டும்.பெற்றோருக்கு பிறகு அவர்கள் தான், மாணவர்களின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகித்து, வழிகாட்டுபவர்களாக உள்ளனர்.ஆகவே, அந்த பொறுப்பை உணர்ந்து ஆசிரியர்களும் பேராசிரியர்களும் நடந்து கொள்ள வேண்டும். போலீசார் தரப்பில் இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார். பெற்றோர் திட்டியதற்காக 11 மாணவர்கள், உடல் நலம் காரணமாக 11 பேர், காதல் பிரச்னையில் நான்கு பேர், குடும்ப பிரச்னையில் 3 பேர், தேர்வில் தோற்றதற்காக ஒருவர், மன அழுத்தம் காரணமாக 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
தற்கொலை வயதுவாரியாக
ஆண்டு/13 வரை வயது/14 - 17வயது/18-24வயதுமொத்தம் 2024/2/13/19/342025 மார்ச் வரை/2/5/4/11