அனைத்து பஸ் ஸ்டாப்களிலும் கேமரா: போலீசார் நடவடிக்கை
கோவை : அனைத்து பஸ் ஸ்டாப்களிலும் கேமராக்கள், அவசரகால தொடர்பு வசதி ஏற்படுத்த, மாநகர போலீசார் நடவடிக்கையை துரிதப்படுத்தியுள்ளனர்.2012ம் ஆண்டு டில்லி பஸ்சில், நடந்த கூட்டுபாலியல் பலாத்காரத்துக்குப் பின், மத்திய அரசு நிர்பயா திட்டத்தை செயல்படுத்தியது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் திட்டம் வாயிலாக நிதி ஒதுக்கப்பட்டது.கோவை மாநகரில் பஸ்சில் பயணம் செய்யும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, பஸ்களில் கேமரா பொருத்த வேண்டும் என, போலீசார் உத்தரவிட்டனர். அரசு பஸ்களிலும் கேமராக்கள் பொருத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், பஸ் ஸ்டாப்களில் கேமரா பொருத்தவும் திட்டமிடப்பட்டது. அதன்படி, கோவை மாநகரில் உள்ள, 200 பஸ் ஸ்டாப்களில் கேமராக்கள், அவசர கால தொடர்பு வசதி(எஸ்.ஓ.எஸ்.,) அமைப்பை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.மார்ச் 8ம் தேதி, 'சேப் கோவை' எனும் இத்திட்டம் துவங்கி வைக்கப்பட்டது. இந்நிலையில், அனைத்து பஸ் ஸ்டாப்களிலும், இத்திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கேமரா பொருத்த முடிவு'
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் கூறுகையில், ''ஏற்கனவே கேமராக்கள், எஸ்.ஓ.எஸ்., பட்டன் பொருத்தப்பட்டுள்ளன. பட்டனை அழுத்தி பெண்கள் பேசும் போது, அவர்களுடன் கட்டுப்பாட்டு அறையில் இருக்கும் போலீசார், அவருடன் பேசுவர். அதற்குள் ரோந்து போலீசார் அங்கு சென்று நடவடிக்கை எடுப்பர். இதுவரை, 25 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இதையடுத்து மீதமுள்ள, 148 பஸ் ஸ்டாப்களில் கேமராக்கள், எஸ்.ஓ.எஸ்., கருவிகளை பொருத்த, நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.