பிறப்பு சான்று பெறுவதில் கவனம் தேவை! நகராட்சி சுகாதாரத்துறையினர் அறிவுரை
பொள்ளாச்சி; பிறப்பு சான்றிதழ் பெறும் போது, பெற்றோர்கள், தங்களது ஆதார் விபரங்களை சரியாக குறிப்பிடுவது அவசியம், என, தெரிவிக்கப்பட்டுள்ளது.பள்ளியில் குழந்தைகளை சேர்ப்பது முதல், வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு, பான் கார்டு, பாஸ்போர்ட் என அனைத்துக்கும், ஆதார் கார்டு அவசியம். தற்போதைய சூழலில், பிறப்பு சான்றிதழ் பெற்றவர்களால் மட்டுமே ஆதார் கார்டு பெற முடியும்.ஆனால், பெற்றோர் பலர், பிறப்பு சான்றிதழ் பெறும் போது, இனிஷியல், அவரவர் பெயர் உள்ளிட்ட விபரங்கள் சரியாக இருப்பதை உறுதி செய்வதில்லை.குழந்தைகளுக்கு ஆதார் பதிவுக்கு செல்லும் போது, பெற்றோரின் ஆதார்விபரங்களுடன், பிறப்பு சான்றிதழ் ஒத்துப்போகாததால், மீண்டும் திருத்தம் செய்ய அலைமோதுகின்றனர்.நகராட்சி சுகாதாரத்துறையினர் கூறியதாவது:பிறப்பு சான்றிதழில், பெற்றோரின் இனிஷியல் இல்லை என்றால் மீண்டும் பிறப்பு சான்றிதழில், இனிஷியல் போட்டு சென்றால் மட்டுமே குழந்தைகளுக்கு ஆதார் பதிவு செய்ய முடியும். ஆனால், பிறப்பு சான்றிதழ் பெறும்போது,இனிஷியல் இல்லாமல் வாங்கி செல்வர். குறிப்பிட்ட நாட்களுக்குள் திருத்தம் செய்ய முற்படுவதும் கிடையாது.இனிஷியல் போட்டு பிறப்பு சான்றிதழ் வாங்கினால் மட்டுமே, குழந்தைக்கு ஆதார் கார்டு எடுக்க முடியும் என தெரிவிக்கப்படுவதால், அலைமோதுகின்றனர். குறிப்பாக, இ-சேவை மையத்துக்கு சென்று, குழந்தைகளுக்கு ஆதார் பதிவுக்கு செல்லும் முன், தந்தை, தாய் ஆகியோரின் பெயர், அவரவர் ஆதார் மட்டுமின்றி பிறப்பு சான்றிதழில் எவ்வாறு உள்ளது என்பதை உறுதிபடுத்த வேண்டும்.ஆதாரில் இனிஷியல் இருந்து, பிறப்பு சான்றிதழில் இனிஷியல் இல்லை என்றால், குழந்தைக்கு ஆதார் பதிவு செய்ய முடியாது. பிறப்பு சான்றிதழில் தந்தை, தாய் இருவரின் பெயருடன் இனிஷியல் சேர்த்து வருமாறு திருப்பி அனுப்புவர்.அதேபோல, பிறப்பு சான்றிதழில் பெற்றோர் பெயருக்கு பின்னால் தந்தை பெயர் இருந்து, ஆதாரில் இல்லை என்றால் அதுவும் சிக்கல் தான். எனவே, பிறப்பு சான்றிதழில் ஆதாரில் உள்ளபடியே பெற்றோர் பெயரை பதிவு செய்வது அவசியம்.இல்லாவிட்டால், ஐந்து ஆண்டுகள் கழித்து அலைய வேண்டியிருக்கும். உரிய ஆவணங்கள் இன்றி, பிறப்பு சான்றிதழில் அனைத்து விபரங்களையும் எளிதில் திருத்தம் செய்ய முடியாது.இவ்வாறு, கூறினர்.