சிறுமுகை ஐயப்பன் கோவிலில் தேர் பவனி
மேட்டுப்பாளையம்; சிறுமுகையில் ஐயப்பன் சுவாமி தேர் பவனி நடைபெற்றது. சிறுமுகை எலகம்பாளையத்தில் கீழ் சபரி ஐயப்பன் கோவிலிலும், லட்சுமி ஹயக்ரீவர் கோவிலும் உள்ளது. இக்கோவிலின், 50வது ஆண்டு மண்டல பூஜையும், ஐயப்பன் தேர் பவனியும் நடந்தது. நேற்று காலை ஐயப்பன் சுவாமிக்கும் லட்சுமி ஹயக்ரீவருக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. 10.30 மணிக்கு ஐயப்பன் சுவாமியின் தேர்பவனி செண்டை மேளத்துடன் புறப்பட்டது. கோவிலில் இருந்து புறப்பட்ட தேர் பவனி, மேட்டுப்பாளையம் சாலை வழியாக ஆலாங்கொம்பை அடைந்தது. அங்கு பக்தர்கள் ஐயப்ப சுவாமியை வழிபட்டனர். இந்த தேர் பவனியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று காலை, 6:00 மணிக்கு ஐயப்ப சுவாமிக்கு, 108 கலச பாலாபிஷேகம் நடைபெற உள்ளது. இதை அடுத்து சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடைபெற உள்ளது. மதியம் அன்னதானமும், மாலை, 6:00 மணிக்கு படி பூஜையும், 7:00 மணிக்கு புஷ்பாபிஷேகமும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.