உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிட்டி கிரைம் செய்திகள்

சிட்டி கிரைம் செய்திகள்

மொபைல்போன் பறிப்பு

கோவை சிட்கோ ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் ராதா முகேஷ், 31; ஆட்டோ டிரைவர். நேற்று சுந்தராபுரம் ஆட்டோ ஸ்டாண்டில் நின்றிருந்தார். அங்கு வந்த இரு வாலிபர்கள் பீளமேடு செல்ல வேண்டும் எனக்கூறினர். இதையடுத்து ராதாமுகேஷ் இருவரையும், பீளமேடு சென்று கொண்டிருந்தார். நவஇந்தியா மின்மயானம் அருகே தனலட்சுமி நகர் அருகே சென்ற போது இருவரும் ஆட்டோவை நிறுத்துமாறு கூறினர்.ராதாமுகேஷ் ஆட்டோ வாடகை கேட்டார். வாடகை கொடுக்க மறுத்து இருவரும் ராதாமுகேசை மிரட்டி, அவரது மொபைல்போனை பறித்துக்கொண்டு தப்பினர். ராதா முகேஷ் சத்தமிட்டதால் அருகிலிருந்தவர்கள் அவர்களை பிடிக்க முயன்றனர். இருவரில் ஒருவர் தப்பிய நிலையில், மற்றொருவர் பிடிபட்டார். அவர் ரேஸ்கோர்ஸ் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். விசாரணையில், அவர் பாப்பநாயக்கன்பாளையம் ஸ்ரீராமபுரத்தை சேர்ந்த சூர்யா, 20 எனத் தெரிந்தது. அவரை போலீசார் சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய சச்சின் என்பவரை தேடி வருகின்றனர்.

இருவர் தற்கொலை

கோவை வரதராஜபுரம் தண்ணீர் தொட்டி தெருவை சேர்ந்தவர் சக்திவேல், 42; எலக்ட்ரீசியன். திருமணமாகாதவர். பெற்றோருடன் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக கடும் மன உளைச்சலில் இருந்தார். நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சிங்காநல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர்.* கோவை ராக்கிபாளையம் வெற்றிலைக்காரபாளையத்தை சேர்ந்தவர் வரதராஜ், 45. இவர் மனைவி லட்சுமி, 41. சில மாதங்களாக மன ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தார். வரதராஜிடம் தனக்கு வாழ பிடிக்க வில்லை என புலம்பியுள்ளார். நேற்று முன்தினம் வரதராஜ் வெளியூர் சென்றிருந்த போது, லட்சுமி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். துடியலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

விபச்சார புரோக்கர் கைது

கோவை நேரு நகரை சேர்ந்தவர் அஜய், 35. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் சின்னியம்பாளையம் பகுதியில் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த நபர் தன்னிடம் பெண்கள் இருப்பதாக தெரிவித்து, அவரை விபச்சாரத்துக்கு அழைத்தார். அதிர்ச்சியடைந்த அஜய், பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த போலீசார் அந்நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் துடியலுாரை சேர்ந்த சிவா, 40 எனத் தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார் விசாரிக்கின்றனர்.

சமாதானம் செய்தவருக்கு அடி

குனியமுத்துாரை சேர்ந்தவர் கார்த்திகேயன், 43; தனது நண்பரான அப்பாஸ் என்பவருடன் சேர்ந்து கடந்த 29ம் தேதி இரவு பாலக்காடு சாலையில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடையில் மது அருந்திக்கொண்டிருந்தார். அப்போது, அருகில் மது குடித்துக்கொண்டிருந்த குனியமுத்துாரை சேர்ந்த அமீன் என்பவருக்கும், அப்பாசுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. கார்த்திகேயன் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பினார்.பின்னர், கார்த்திகேயன் தனது பைக்கை எடுக்க சென்ற போது, அங்கு காத்திருந்த அமீன் கற்களை எடுத்து எறிந்து கார்த்திகேயனை தாக்கினார். தகாத வார்த்தைகளால் திட்டி கீழே தள்ளி உதைத்தார். கார்த்திகேயன் குனியமுத்துார் போலீசில் அளித்த புகாரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து அமீனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மாணவி மர்ம மரணம்

ராமநாதபுரம், 80 அடி ரோட்டை சேர்ந்தவர் ஹரிசங்கர் மகள் வர்ஷினி, 17. பிளஸ் 2 முடித்து விட்டு ஒட்டன்சத்திரத்தில் உள்ள நர்சிங் கல்லுாரியில் சேர்ந்தார். இந்நிலையில், கடந்த 30ம் தேதி வீட்டில் இருந்த வர்ஷினி, வீட்டார் திரும்பி வந்து பார்த்தபோது, துாக்கிட்டு மரணம் அடைந்த நிலையில் காணப்பட்டார். தகவல் அறிந்த ராமநாதபுரம் போலீசார், வர்ஷினியின் உடலை மீட்டனர். வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

விபத்தில் முதியவர் பலி

சூலுார், எஸ்.ஆர்.எஸ்., நகரை சேர்ந்தவர் நாகராஜ், 63. இவர் தனது பைக்கில் ஏ.ஜி., புதுாரில் இருந்து ராவத்தூர் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரது எதிரில் வந்த ஒரு பைக், கட்டுப்பாட்டை இழந்து நாகராஜ் மீது மோதியது. இதில் துாக்கி வீசப்பட்ட நாகராஜ் பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

வீட்டில் மது விற்பனை

தெற்கு உக்கடம், ஜி.எம்.நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், சட்ட விரோதமாக மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, ஜி.எம்.நகரை சேர்ந்த சுந்தரம், 51 என்பவர், தனது வீட்டு கழிவறை அருகில் மறைத்து வைத்து, மதுபானம் விற்பனை செய்வது தெரியவந்தது. போலீசார் அங்கிருந்த, 27 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். சுந்தரத்தை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை