உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாட்டு வண்டிகளில் பழநி வந்த கோவை பக்தர்கள்

மாட்டு வண்டிகளில் பழநி வந்த கோவை பக்தர்கள்

பழநி:திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலுக்கு தைப்பூசத்தை முன்னிட்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பணிக்கம்பட்டி பக்தர்கள் மாட்டு வண்டிகளில் வந்து தரிசனம் செய்தனர்.இக்கோயிலில் பிப்.,11ல் தைப்பூசத்திருவிழா நடக்கிறது. இதையொட்டி பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக பழநி வருகின்றனர்.நேற்று முன்தினம் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பணிக்கம்பட்டியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மாட்டு வண்டிகளில் வந்தனர். இவர்கள் நுாறு ஆண்டுகளுக்கு மேலாக பாரம்பரிய முறையில் மாட்டு வண்டிகளில் வருகின்றனர். இந்தாண்டு 20 க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் வந்தனர். மாட்டுவண்டிகளுடன் ஆட்டோ, சைக்கிள், டூவீலர், கார்களிலும் பக்தர்கள் வந்தனர். காவடிகள் எடுத்து, அலகு குத்தி அவர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.இவர்கள் கூறியதாவது: 2024ல் கிரிவீதியில் மாட்டு வண்டிகளுக்கு அனுமதி இருந்தது. இந்தாண்டு அனுமதி இல்லாததால் தனியார் வாகன நிறுத்தங்களில் மாட்டு வண்டிகளை நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஒரு மாட்டு வண்டிக்கு ரூ.400 வீதம் தனியார் கட்டணம் வசூலித்தனர். இதை குறைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

அன்னதானம்110 பேருக்கு அனுமதி

பழநி பாதயாத்திரை பக்தர்களுக்கு ஆங்காங்கு தன்னார்வலர்கள், தனியார் அமைப்பினர் அன்னதானம் வழங்குகின்றனர். இவர்கள் அனுமதி பெற்றே அன்னதானம் வழங்க வேண்டும் என உணவு பாதுகாப்பு துறையினர் அறிவித்தனர். இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் விண்ணப்பித்தனர். தற்போது வரை 110 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த உரிமத்தை ஒரு ஆண்டுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை