| ADDED : ஆக 22, 2011 10:59 PM
கோவை : 'வெளிநாட்டு தொழில்நுட்ப கல்வியுடன் ஒப்பிடும் போது, இந்திய தொழில்நுட்ப கல்வியின் தரம் பல மடங்கு உயர்ந்தது' என, கோவை அண்ணா தொழில்நுட்ப பல்கலை துணைவேந்தர் கருணாகரன் கூறினார். கோவையில் 'ஏக்டிவேட் 11' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. பின்னர், கோவை அண்ணா பல்கலை துணைவேந்தர் கருணாகரன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தின் மொத்த வேலைவாய்ப்பில் 40 சதவீதம் அண்ணா தொழில்நுட்ப பல்லைக்கழகங்களால் வழங்கப்படுகின்றன. இன்ஜினியரிங் படிப்பு முடித்து செல்லும் மாணவர்களில் 80 சதவீதம் பேர் பணிக்கு செல்கின்றனர். 20 சதவீதம் பேர்தான் உயர்படிப்புகளுக்கு செல்கின்றனர். தற்போதைய இன்ஜினியரிங் கல்லூரிகள் மாணவ, மாணவியருக்கு படிப்போடு மட்டுமல்லாமல், அவர்களின் திறமைக்கேற்ப வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தர வேண்டிய சூழலில் உள்ளன. இன்ஜினியரிங் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளை தரும் நிறுவனங்கள், முதலில் பயிற்சிகளை அளித்து, நன்கு தேர்வு பெற்ற பின் அவர்களை முழுமையாக பணிக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் 2 லட்சத்து 40 ஆயிரம் இன்ஜினியரிங் வகுப்பு காலி இடங்களில், 40 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன. இதற்கு காரணம் ஒவ்வொரு ஆண்டும் இன்ஜினியரிங் வகுப்பு சேர்க்கை இடங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதுதான் காரணம். நாட்டில் ஏற்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப புரட்சியால் இந்திய நகரங்கள் மட்டுமல்லாமல், கிராம பொருளாதாரம் கூட குறிப்பிடத்தக்க அளவு மேம்பட்டு இருக்கிறது, என்றார்.