உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மானாவாரி சாகுபடிக்கு ஏற்ற சோளம் கே 12 ரகம்! விதைச்சான்று உதவி இயக்குனர் தகவல்

மானாவாரி சாகுபடிக்கு ஏற்ற சோளம் கே 12 ரகம்! விதைச்சான்று உதவி இயக்குனர் தகவல்

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே உள்ள விதைப்பண்ணைகளில், விதைச்சான்று உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்.கோவை விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச்சான்றளிப்பு உதவி இயக்குனர் மாரிமுத்து, பொள்ளாச்சி வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் உள்ள சோளம் விதைப்பண்ணைகளை ஆய்வு செய்தார்.அவர் கூறியதாவது:சோளம் 'கே 12' என்ற ரகம், 95 - 100 நாட்களுக்குள் அறுவடை செய்யக்கூடிய குறைந்த வயதுடையது. மேலும், குளிர்கால மானாவாரி சாகுபடிக்கு ஏற்ற ரகமாகும். இரட்டிப்பு பயன்தரக்கூடியது.தீவன தேவை மற்றும் தானிய தேவையினை சரிவிகிதத்தில், பூர்த்தி செய்யும் ரகமாக 'கே 12' விளங்குகிறது. இதன் சராசரி தானிய மகசூல் மானாவாரியில் ெஹக்டேருக்கு, 3,121 கிலோவும், இறவையில், 5,801 கிலோ வரை கிடைக்கும்.மேலும், தீவனத்தட்டு (உலர் தீவனம்) ெஹக்டேருக்கு, 12 மெட்ரிக் டன் வரை கிடைக்கும். இவ்வகை சோளமானது இலைகளில் கருமை நிறத்தில் காணப்படும், 55 நாளில், பூட்டை (சோள கதிர்) வெளி வர தொடங்கிவிடும். பூட்டையின் வடிவம் சிறிது நீளமாக இருக்கும். சோள மணிகள் கோள வடிவில், பால் வெண்மை நிறத்தில் காணப்படும்.சோள விதைப்பண்ணையில் மூன்று நிலையில், விதைச்சான்றளிப்பு துறையில் வயலாய்வு மேற்கொள்ளப்படும். முதலாம் மற்றும் இரண்டாம் வயலாய்வில், பயிர் வளர்ச்சி, பூக்கும் பருவத்தில் அதாவது, 45 - 70 நாட்களில் ஆய்வு செய்யப்படும்.பயிர் விலக்கு துாரம், கலவன் நீக்குதல், தரமான விதை உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆதார நிலை விதையில், 0.05 சதவீதம் மற்றும் சான்று விதையில், 0.1 கலவன் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.மூன்றாவது வயலாய்வு முதிர்வு பருவத்தில் (90வது நாளில்), கலவன் அகற்றுதல் மற்றும் ஆய்வுடன் குறித்தறிவிக்கப்பட்ட நோய், சோளத்தில் கரிப்பூட்டை என்ற நோய் தாக்குதலின் சதவீதம் கண்டறியப்படும்.இந்த வயல் தரங்களில் தேர்ச்சி பெறக்கூடிய விதைப் பண்ணைகளில், அறுவடை செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. அவ்வாறு அறுவடை செய்த விதைப்பண்ணைகளின் வயல்வட்ட விதைகள் சுத்தம் செய்து, அங்கீகரிக்கப்பட்ட விதை சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பி வைத்து சுத்தி பணி மேற்கொள்ளப்படுகிறது.சுத்தி செய்த குவியலிலிருந்து, ஒரு கிலோ விதை மாதிரி எடுத்து அரசு அங்கீகாரம் பெற்ற விதை பரிசோதனை நிலையத்துக்கு அனுப்பப்படும். அங்கு விதை தரங்களில் பகுப்பாய்வு முடிவில், தேர்ச்சி பெற்ற விதைகளை சான்று நிலை என்றால், நீல நிற அட்டைகளும், ஆதார நிலை என்றால் வெள்ளை நிற அட்டைகளும் பொருத்தி, ஒரு கொள்கலனுக்கு, 15 கிலோ என்ற அளவில் விதைகள் அடைக்கப்படும்.அதன்பின், உற்பத்தியாளர் அட்டையுடன் சான்றட்டை பொருத்தி விதை உற்பத்திக்கு விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. எனவே, விவசாயிகள் எதிர்வரும் புரட்டாசி - ஐப்பசி பட்டத்தில் இந்த ரகத்தினை பயிர் செய்வதால் நல்ல மகசூல் பெறலாம்.விதைப்பண்ணை அமைக்க விருப்பம் உள்ள விவசாயிகள், இப்பட்டத்தினை பயன்படுத்தி விதைப்பண்ணைகளை அமைத்தால், விதைச்சான்றளிப்பு துறை வாயிலாக தகுந்த வயலாய்வு மேற்கொள்ளப்படும்.தரமான விதை உற்பத்தி செய்யும் வழிமுறைகள் வழங்கியும், விவசாயிகளுக்கு தேவையான தகவல்களும் அளித்து, சிறந்த மகசூல் பெற்று வருமானம் பெற வழிவகை செய்யப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.இந்த ஆய்வின் போது, பொள்ளாச்சி விதைச்சான்று அலுவலர் நந்தினி, விதை உதவி அலுவலர்கள் ராமந்திரன், விஜயகுமார், மாடசாமி, சிவமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை