டி.என்., ரைட்ஸ் திட்டத்தில் 77 பிரிவுகளில் விபரம் சேகரிப்பு
கோவை: தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின்(டி.என்., ரைட்ஸ்) கீழ், மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணி, கோவையில் துவங்கியுள்ளது. இதில், 70 வகையான கேள்விகள் கேட்கப்பட்டு, ' எஸ்.ஆர்.இ., ' எனும் பிரத்யேக செயலியில், அப்டேட் செய்யப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து வசதிகளும் அவரவர் இல்லங்களுக்கே சென்றடைய வேண்டும் என்ற நோக்கில், டி.என்., ரைட்ஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. 150க்கும் மேற்பட்ட முன்கள பணியாளர்கள் தொகுப்பூதியம் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வாயிலாக, மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ், மாவட்டம் முழுவதும் அனைத்து வீடுகளிலும் கணக்கெடுப்பு பணி துவக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் துறை திட்ட அலுவலர் சுந்தரேசன் கூறுகையில், ''டி.என்., ரைட்ஸ் திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகள் விபரங்கள், அவர்களின் குடும்ப விபரங்கள் தொகுக்கப்பட்டு வந்தது. தற்போது, அனைத்து வீடுகளிலும் கணக்கெடுப்பு பணியை, கடந்த 2ம் தேதி துவங்கியுள்ளோம். 70 வகையான கேள்விகள் கேட்கப்பட்டு உடனுக்குடன், எஸ்.ஆர்.இ., செயலியில் அப்டேட் செய்யப்படும்.இதன் வாயிலாக, அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் அனைத்து உரிமைகளும் சென்றடைவது உறுதிசெய்யப்படும். பட்டியலில் விடுபட்டவர்கள் கூட, இக்கணக்கெடுப்பு பணி வாயிலாக அறியப்பட்டு, சரியான உதவிகள் வழங்கப்படும்,'' என்றார்.