உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  தர பரிசோதனை ஆய்வகம் அமைவதில் இழுபறி தாமதத்தால் நிதி பறிபோகும் அபாயம்

 தர பரிசோதனை ஆய்வகம் அமைவதில் இழுபறி தாமதத்தால் நிதி பறிபோகும் அபாயம்

கோவை: தமிழகத்தில் முதல் முறையாக அமையவுள்ள, மருந்துவ உபகரணங்களுக்கான தரப்பரிசோதனை ஆய்வகத்துக்கு நிதி ஒதுக்கி மூன்றாண்டுகள் கடந்தும் பணிகள் துவங்கப்படாததால், சிக்கல்கள் எழுந்துள்ளன. மருந்துகளின் தரம் ஆய்வு செய்வது போல், பல்வேறு மருத்துவ பயன்பாட்டுக்குக்கான உபகரணங்களின் தரமும் உறுதிசெய்யப்படவேண்டியது கட்டாயம். அதற்கான ஆய்வகம், தற்போது வரை தமிழகத்தில் இல்லை. முதல் முறையாக, கோவையில், 20 ஆயிரம் சதுரடியில் மருத்துவ உபகரணங்கள் ஆய்வகம் அமைக்க, 29.67 கோடி ரூபாய் கடந்த, 2024ல் ஒதுக்கப்பட்டது. மத்திய, மாநில அரசுகள் 60:40 என்ற பங்கீட்டில் நிதி பல்வேறு கட்டங்களாக வழங்க ஒப்புதல் வழங்கியது. தற்போது மாநில மருந்து கட்டுப்பாட்டு துறையிடம் நிதி தயார் நிலையில் உள்ளது. இப்பணிகள், மார்ச் 31ம் தேதிக்குள் துவங்காத பட்சத்தில் நிதி மத்திய அரசு திரும்பப்பெற்றுவிடும் சூழல் எழுந்துள்ளது. கோவையில் அமையவுள்ள இந்த ஆய்வகத்துக்கு, முதல் முறையாக கவுண்டம்பாளையம் பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டது. இதில் பல்வேறு சிக்கல்கள் இருந்ததால், ஒப்புதல் பெற முடியாமல் போனது. தொடர்ந்து, அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லுாரி வளாகத்தில் ஒரு ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு, அனைத்து ஒப்புதல்களும் பெறப்பட்டன. இந்நிலையில், மருத்துவ கல்லுாரி மாணவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, கட்டுமான பணிகள் துவங்குவதில் மீண்டும் தாமதம் நீடிக்கிறது. மருத்துவ மாணவர் ஒருவர் கூறுகையில், ' மருத்துவ உபகரண ஆய்வகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலம், விளையாட்டு பயிற்சி செய்வதற்கான இடம். தொடர்ந்து அரசின் பல்வேறு துறைகளுக்கு மருத்துவ கல்லுாரி வளாகத்தில் இடம் ஒதுக்கப்பட்டு இடம் பறிக்கப்படுவதால் எதிர்ப்பு தெரிவித்துள்ளோம்' என்றார். மருத்துவ கல்லுாரி நிர்வாகிகள் கூறுகையில், 'மீண்டும்வேறு இடம் தேர்வு செய்யும் பணியில் உள்ளோம். இதுகுறித்து முழுமையான தகவல் மருந்து கட்டுப்பாட்டு துறையில் தான் கேட்கவேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை