கோவை :ஆசிரியை கண்டித்ததால், மனமுடைந்த மாணவி, கல்லூரியின் மேல் தளத்தில்
இருந்து குதித்தார். இதற்கு காரணமான ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க
வலியுறுத்தி,நேற்று கல்லூரி மாணவியர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாணிக்காபுரம் வைரம் நகரை சேர்ந்தவர் நாகராஜ்;
தொழிலாளி. இவரது மகள் புவனேஸ்வரி (18). கோவை அரசு மகளிர் பாலிடெக்னிக்
கல்லூரி இறுதியாண்டு மாணவி. கடந்த இரு நாட்களுக்கு முன், வகுப்புக்கு
தாமதமாக வந்த மாணவிக்கு, ஆசிரியை அனுமதித்தும் அந்த மாணவி கவனிக்காததால்,
உள்ளே இருந்த புவனேஸ்வரி ஜாடையில் அவரை அழைத்தார். வகுப்பை கவனிக்காமல்
வெளியே ஜாடை செய்ததால், அவரை வெளியேற்றினார் ஆசிரியை. சம்பவத்தை சொல்லி
மன்னிப்பு கேட்டும், ஆசிரியை ஏற்காததால், புவனேஸ்வரி மாடியில் இருந்து கீழே
குதித்தார். படுகாயம் அடைந்த மாணவி, தனியார் மருத்துவமனையில் தீவிர
சிகிச்சைப் பிரிவில் உள்ளார். இந்நிலையில், ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க
வலியுறுத்தி, நேற்று காலை புவனேஸ்வரியின் வகுப்பு தோழிகள் வகுப்பை
புறக்கணித்து கல்லூரி முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, மாணவியர் பிரதிநிதிகளுடன் கல்லூரி முதல்வர் வனிதாமணி மற்றும்
போலீசார் பேச்சு நடத்தினர். இதில், ஆசிரியை சுகந்திராணி மீது உரிய
நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் எழுத்துபூர்வமாக உறுதி அளித்தார். இது
குறித்து அவர் கூறுகையில், ''நடவடிக்கை எடுக்க எங்களுக்கு அதிகாரம் இல்லை.
நடவடிக்கை எடுக்க தொழில் நுட்ப ஆணையருக்கு பரிந்துரை செய்துள்ளோம்,''
என்றார். 'இடுப்பை ஒடிக்கவா படிக்க அனுப்பினோம்?மாணவியின் தந்தை நாகராஜ்
கூறுகையில், ''50 அடி உயரத்தில் இருந்து கீழே குதித்ததில் இடுப்பு எலும்பு
மற்றும் தண்டுவடம் பாதிக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை தேவைப்படலாம்
என்றும், எழுந்து நடக்க எப்படியும் ஆறு மாதம் ஆகும் என்றும் டாக்டர்கள்
கூறுகின்றனர். படிக்க அனுப்பினால் எலும்பை ஒடித்து அனுப்புகின்றனர்.
நாங்கள் சரியாக படிக்காததால் இந்த நிலையில் உள்ளோம். பிள்ளைகளாவது படித்து
முன்னேறட்டும் என்று நினைத்து, கூரியர் ஆபீசில் வேலை பார்த்து வந்தவளை,
இங்கு படிக்க அனுப்பினோம். ஆனால், ஆசிரியர் பணிக்கே களங்கம் கற்பிக்கும்
வகையில், தற்கொலை செய்ய ஆசிரியர் காரணமாக இருந்துள்ளார்,'' என்று கதறினார்.