உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நோயாளிக்கு படுக்கை; உறவினர்க்கு இருக்கை :கோவை அரசு மருத்துவமனைக்கு அவசர தேவை

நோயாளிக்கு படுக்கை; உறவினர்க்கு இருக்கை :கோவை அரசு மருத்துவமனைக்கு அவசர தேவை

கோவை : அரசு மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்கள் உட்கார, கான்கிரீட் அமர்வு நாற்காலிகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை அரசு மருத்துவமனையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும், 5,000 க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சைக்காக வரும் நோயாளிகள், அழைத்து வரும் உறவினர்கள் என மக்கள் கூட்டம் என மருத்துவமனை வளாகம், எப்போதுமே மனித தலைகளால் நிரம்பி வழியும். குறிப்பாக பிரேத பரிசோதனை அறை முன் கூட்டத்துக்குக் குறைவே இருக்காது. நோயாளிகளை கவனித்து கொள்ளும் உறவினர் தவிர, நலம் விசாரிக்க வரும் உறவினர்கள் என எண்ணிக்கையில் அடங்கா மக்கள் தினமும் வந்து செல்கின்றனர். நோயாளிகளை பார்வையிட மதியம் 12 முதல் 2.00 மணி வரை; 4 முதல் 6.00 மணி ஆகிய நேரங்களில் அனுமதிக்கப்படுகின்றனர். பார்வை நேரங்கள் தவிர மற்ற நேரங்களில் உறவினர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.இதனால் வெளியூர் பகுதியில் வரும் உறவினர்கள், வார்டுக்கு முன் அல்லது மருத்துவமனை வளாகத்தில் மணிக்கணக்கில் காத்துக் கிடக்கின்றனர். இந்நேரங்களில் வேறுவழியின்றி மரங்களின் கீழ் மண் தரைகளில் அமருகின்றனர். உணவு உட்கொள்வது, படுத்துக் கொள்வது, தங்கள் சுகதுக்கங்களை பகிர்ந்து கொள்வது என எல்லா நிகழ்வுகளும் இந்த மரத்துக்குக் கீழேதான் நடக்கின்றன. இவ்வாறு உட்காரும் இடங்கள் என்றும் பார்க்காமல், பலரும் அந்த இடங்களில் எச்சில் துப்பி, சிறுநீர் கழித்து, குப்பையைக் கொட்டி அசுத்தமாக்குகின்றனர். அத்தகைய இடங்களில் மக்களால் உட்காரவும் முடிவதில்லை; மணிக்கணக்கில் காத்திருப்பதால் உட்காராமல் இருக்கவும் முடிவதில்லை. வெயில் காலங்களில் சகித்துக்கொண்டு அமர்ந்து விடலாம். ஆனால் மழைக்காலங்களில் இங்கு மக்கள் படும் அவதியை விவரிப்பது சிரமம். மழைக்காலங்களில் வளா கம் சேறும், சகதியுமாக காட்சியளிக்கும். இதில் உட்காரவே முடியாது என்ற நிøயில் படுப்பது, உணவு உட்கொள்வதை நினைத்தே பார்க்க முடியாது. இதைத் தவிர்க்க மருத்துவமனை வளாகங்களில் மரங்களின் அடியில், கான்கிரீட் இருக்கைகள் அமைக்க வேண்டுமென்பது இங்கு வரும் மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது. மருத்துவமனைக்குள் உள்ள நோயாளிகள் பலருக்கு படுக்கை வசதியின்றி தரையில் படுக்க வேண்டிய அவலம்; அவர்களைப் பார்க்க வரும் உறவினர்களுக்கோ உட்காரவும் இடமில்லாத நிலை. இதற்கெல்லாம் அரசுதான் நிதி ஒதுக்க வேண்டுமென்றில்லை. அரசு மருத்துவமனை நிர்வாகம் நினைத்தால், நிச்சயமாக இவற்றை நிறைவேற்ற முடியும். மருத்துவனையின் உட்பகுதியிலும், வளாகத்திலும் சுத்தம், சுகாதாரத்தைப் பேணி காக்கவும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இந்த சின்ன விஷயத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தினால், பல ஆயிரம் மக்கள் பயனடைவர்; மருத்துவமனை நிர்வாகத்தை மனதார வாழ்த்துவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை