உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பனப்பள்ளி-தூவைப்பதி இடையே மினிபஸ்: வீரபாண்டி ஊராட்சித்தலைவர் கோரிக்கை

பனப்பள்ளி-தூவைப்பதி இடையே மினிபஸ்: வீரபாண்டி ஊராட்சித்தலைவர் கோரிக்கை

துடியலூர் : ''ஆனைகட்டியில் உள்ள ஆரம்பப் பள்ளி மாதிரிப் பள்ளியாகவும், உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாகவும் தரம் உயர்த்தப்படும்,'' என கலெக்டர் கருணாகரன் தெரிவித்தார். பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், நெ.24 வீரபாண்டி ஊராட்சிக்குட்பட்ட ஆனைகட்டியில் மனுநீதி நாள் முகாம் நடந்தது. நிகழ்ச்சியில், கலெக்டர் கருணாகரன் பேசுகையில்,''கோவை வடக்கு, தெற்கு தாலுகாக்களில் தலா 7 ஆயிரம் பேருக்கு முதியோர் உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது. வறுமைக் கோட்டுக்கு கீழ் பட்டியலிடப்பட்ட அனைவருக்கும் முதியோர் உதவி தொகை கட்டாயம் வழங்கப்படும். ஆனைகட்டி பகுதியில் பாலம், ரோடு பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்'', என்றார். வருவாய் கோட்டாட்சியர் சாந்தகுமார் பேசுகையில்,'' ஜாதி சான்றிதழ் கோரும் ஆதி திராவிட மற்றும் பழங்குடியினர் உரிய ஆதாரங்களுடன் விண்ணப்பித்தால் உடனடியாக சான்று வழங்கப்படும் '' என்றார். மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அதிகாரி அருமைதாஸ் பேசுகையில்,''மாவட்டத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியருக்காக 36 விடுதிகள் இயங்குகின்றன. இந்த விடுதிகளில் மாணவ,மாணவியர் சேர்ந்து பயன் பெறலாம்,'' என்றார். பெரியநாயக்கன்பாளையம் தோட்டக்கலை உதவி இயக்குனர் ராஜஸ்ரீ பேசுகையில்,'' ஆனைகட்டியில் நிலவும் சீதோஷ்ண நிலைக்கு பெருநெல்லி, கோ-கோ பயிரிட்டால் விவசாயிகள் அதிக லாபம் பெறலாம். தோட்டக்கலைத் துறை சார்பில் 50 சதவீத மானிய விலையில் விதைகள், பழச்செடிகள் வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள் பெற்று பயன் அடையலாம்,'' என்றார். பெரியநாயக்கன்பாளையம் வட்டார வேளாண்மை துறை உதவி இயக்குனர் வசந்தரேகா பேசுகையில்,''வேளாண்மையை ஊக்குவிக்க அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல் படுத்தி வருகிறது. இதைப் பெற விவசாயிகள் தங்களுடைய பெயர்களை வேளாண்மை துறையில் பதிவு செய்து கொள்ள வேண்டும். சோளம் பயிர் செய்ய, சொட்டு நீர் பாசனம் அமைக்க, மண்புழு உரம் தயாரிக்க அரசின் சார்பில் சலுகைகள் வழங்கப்படுகின்றன,'' என்றார். வீரபாண்டி ஊராட்சித் தலைவர் செந்தில் நடராஜ் பேசுகையில்,''முதியோர் உதவித்தொகை பெற 500 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் 93 பேருக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளன. அனைவருக்கும் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பனப்பள்ளி- தூவைப்பதி இடையே மினி பஸ் இயக்க வேண்டும்,'' என்றார். வீரபாண்டி ஊராட்சி முன்னாள் தலைவர் விஜயன் பேசுகையில்,'' காட்டு யானை தொந்தரவை தடுக்க கிராமவாசிகளுக்கு 'ராட்சத டார்ச் லைட்' வழங்க வேண்டும். மழைக்காலத்தில் தெக்காலூர் மக்கள் துன்பப்படுவதை தடுக்க பாலம் அமைக்க வேண்டும். ஆதிவாசி மக்களுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும்'' என்றார். நிகழ்ச்சியில், ஆதிவாசிகள் 29 பேருக்கு ஜாதிச்சான்றிதழும், 105 பேருக்கு முதியோர் உதவித் தொகையும், 27 பேருக்கு ரேஷன் கார்டு உள்ளிட்ட ஒரு லட்சத்து 24 ஆயிரம் மதிப்புள்ள அரசின் நிதி உதவிகள் வழங்கப்பட்டன. கூட்டத்தில், மாவட்ட வன அலுவலர் திருநாவுக்கரசு உள்ளிட்ட பல அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ