கோவை : அன்றொரு பேச்சு, இன்றொரு பேச்சு இல்லை; எம்.பி., தேர்தலின்போது
சொன்ன அதே பதிலைத்தான் இப்போதும் சொல்கிறார். எவ்வளவு ஓட்டு வாங்குவீங்க
என்பதுதான் கேள்வி; கண்டிப்பா ஜெயிப்போம் என்பதுதான் பதில். சொன்னவர்,
பா.ஜ., மேயர் வேட்பாளர் ஜி.கே.செல்வக்குமார்; அவர்தான் அன்றைக்கு எம்.பி.,
தேர்தலிலும் வேட்பாளர். * கொ.மு.க.,வுடன் சேர்ந்து போட்டி போடுறீங்க;
தேர்தலை எப்படி எதிர்கொள்ளப் போறீங்க? நிச்சயமா ஜெயிப்போம்ங்கிற நம்பிக்கை
இருக்கு. மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறாங்க. நாடு முழுவதும்
ஊழலுக்கு எதிரா ஓர் அலை கிளம்பியிருக்கு. குஜராத்ல சூரத், அகமதாபாத்
மாநகராட்சி நிர்வாகங்கள் எப்படி செயல்படுதுங்கிறதை நான் நேரடியாப்
பார்த்திருக்கேன். அதே முறையில, இங்கேயும் நிர்வாகத்தைக்கொண்டு வந்து,
கோவையை 'சூப்பர் சிட்டி'யாக்குவேன். * மாநிலத்தில் ஆளும்கட்சியாக இல்லாத
ஒரு கட்சி, உள்ளாட்சியில் எப்படி சிறப்பாக செயல்பட முடியும்? மாநகராட்சியில
அதிகமான வார்டுகள்ல நாங்க ஜெயிப்போம். தமிழர்களுக்கு எதிரான காங்., ஊழலில்
ஊறிய தி.மு.க., ஆகிய கட்சிகளுக்கு எதிரான ஓட்டு, எங்களுக்குத்தான்
கிடைக்கும். பெரும்பான்மையாக இந்த மாநகராட்சியைக் கைப்பற்றும்போது,
எங்களுடைய செயல்பாட்டை யாரும் தடுத்து விட முடியாது. * உள்ளாட்சியிலும்
ஆளும்கட்சி ஜெயித்தால்தான் ஊருக்கு நல்லது என்று ஒரு பிரசாரம்
நடக்கிறதே...? அப்படிப் பார்த்தால், தி.மு.க., ஆட்சியில் நடந்த வேலைகளுக்கு
மக்கள் ஓட்டுப்போட்டிருக்க வேண்டுமே?. ஊருக்கு நல்லது செய்கிறேன் என்று
யாராவது தவறு செய்தால், அவர்களை மக்கள் உடனே தூக்கி எறிந்து விடுவார்கள்.
அ.தி.மு.க.,வின் 100 நாள் ஆட்சியைப் பார்த்திருக்கும் மக்கள், மற்றும் ஒரு
மாற்று வேண்டுமென்று நினைக்கின்றனர். அந்த மாற்று, பா.ஜ., கூட்டணி மட்டுமே.
* கொ.மு.க., ஒரு சாதிக்கட்சி என்று மக்களிடம் ஒரு எண்ணம் இருக்கிறது;
அந்தக் கட்சியுடன் நீங்கள் கூட்டணி சேர்ந்ததை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா?
கொ.மு.க., நிச்சயமாக சாதிக்கட்சியில்லை; அக்காலத்தில் கொங்கு நாடு, தனி
ராஜ்யமாக வளம் கொழித்து இருந்தது. அதனை இப்போதைய ஆட்சியாளர்கள்
புறக்கணித்ததன் எதிரொலியாக, இப் பகுதி முன்னேற்றத்துக்காக துவக்கப்பட்ட ஓர்
இயக்கம். எல்லா சாதி, இனத்தைச் சேர்ந்தவர்களும் அதில் இருக்கிறார்கள்.
இஸ்லாமியர் கூட அக்கட்சி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். * சரியாகச்
சொல்லுங்கள், எவ்வளவு ஓட்டு வாங்குவீங்க?யாரும் எதிர்பாராத விதமாக நாங்கள்
ஜெயிப்போம். எங்களின் இரு கட்சிகளிலும் ஏராளமான இளைஞர்கள் இருக்கின்றனர்.
மக்களும் நிறைய நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.* கோவையை முன்னேற்ற என்ன
திட்டம் வைத்திருக்கிறீர்கள்...?என்னுடைய ஸ்லோகம் ஒன்றுதான். மிஸ்டர்
க்ளீன்; அதாவது, க்ளீன் தி கார்ப்பரேஷன்; க்ளீன் தி
கரப்ஷன்.(நம்பிக்கையுடன் நன்றாகவே பேசுகிறார் செல்வக்குமார்; மக்கள் இவரை
நம்புவார்களா?)