பார்வையற்ற மாணவர்களுக்கு பிரெய்லி புத்தகம் வினியோகம்
கோவை:கோவை மாவட்டத்தில் சூலுார், பேரூர், காரமடை, பி.என்.பாளையம் உள்ளிட்ட 15 வட்டாரங்களில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான, பகல் நேர மையங்கள் செயல்படுகின்றன. சிறப்பு பயிற்றுனர்கள் மூலம் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. மாவட்ட அளவில் 3,300 மாற்றுத்திறனாளி மாணவர்கள், நடப்பு கல்வியாண்டில் படிக்கின்றனர். இவர்களில், பார்வையற்ற மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் தற்போது வழங்கப்பட்டுள்ளன. கோவை நகரம், பி.என்.பாளையம், மதுக்கரை, காரமடை, பொள்ளாச்சி (தெற்கு) ஆகிய வட்டாரங்களில், அரசு பள்ளிகளில் பயிலும் 15 பார்வையற்ற மாணவர்களுக்காக தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கும் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாடத்துக்கும் இரண்டு தொகுதிகளாக, புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.