மரங்களில் ஆணி அடித்து விளம்பரங்கள் செய்யாதீர்!
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, செங்குட்டைபாளையம் கிராமத்தில் இருக்கும் மரங்களில் ஆங்காங்கே விளம்பர பதாகைகள் தொங்கவிடப்பட்டு இருப்பதால் இயற்கை ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். கிணத்துக்கடவு, செங்குட்டைபாளையம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி முன், புளிய மரங்களில் தனியார் விளம்பர பதாகைகள் ஆணி அடித்து வைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, பள்ளி அருகே உள்ள கோவில் வளாகத்தில் இருக்கும் மரங்கள் மற்றும் தனியார் லே-அவுட் உள்ளிட்ட இடங்களில், விளம்பரங்கள் தொங்கவிடப்பட்டுள்ளது. இதனால், மரங்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதால் இயற்கை ஆர்வலர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மக்கள் கூறுகையில், 'இப்பகுதியில் உள்ள மரங்களில் பல ஆண்டுகளாக, ஆணி அடித்து விளம்பரங்கள் வைக்கப்படுகிறது. இதனால் மரத்தின் ஆயுள் குறைய அதிக வாய்ப்புள்ளது. எனவே, மரங்களில் விளம்பரங்கள் செய்வதை தவிர்க்க, முக்கிய இடத்தில் அறிவிப்பு வைக்க வேண்டும். அத்துமீறுவோர் மீது ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்து, அபராதம் விதிக்க வேண்டும்,' என்றனர்.