உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குழாய் உடைப்பால் வீணாகிறது குடிநீர்: ரோடு சேதத்தால் ஓட்டுநர்கள் அவதி

குழாய் உடைப்பால் வீணாகிறது குடிநீர்: ரோடு சேதத்தால் ஓட்டுநர்கள் அவதி

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, குறிச்சி - குனியமுத்துார் குடிநீர் திட்டத்தில், குழாய் உடைப்பால் குடிநீர் விரயமாகி ரோட்டில் வழிந்தோடுகிறது. பொள்ளாச்சி அருகே, ஆத்துப்பொள்ளாச்சியில் இருந்து, குளத்துார், போடிபாளையம், ஜமீன்ஊத்துக்குளி, ஆச்சிபட்டி, கிணத்துக்கடவு வழியாக, கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட குறிச்சி -குனியமுத்துார் பகுதிகளுக்கு வினியோகம் செய்ய கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்நிலையில், குளத்துார் கிராமத்தில் மூன்று ரோடு சந்திப்பு பகுதியில், குழாய் உடைப்பு ஏற்பட்டு கடந்த இரண்டு மாதங்களாக குடிநீர் வீணாவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். பொதுமக்கள் கூறியதாவது: கிணத்துக்கடவு மற்றும் கோவை, குறிச்சி, குனியமுத்துார் பகுதி மக்களின் தாகம் தீர்க்க, ஆத்துப்பொள்ளாச்சியில் இருந்து குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. குழாயில் அவ்வப்போது உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது. குளத்துாரில் ரோடு சந்திப்பில் கடந்த முறை, குழாயில் ஏற்பட்ட உடைப்பு சரிவர சீரமைக்கப்படவில்லை. இதனால், அதே பகுதியில் நீர்க்கசிவு அதிகரித்து, அதிகளவில் குடிநீர் வீணகிறது. இரு மாதங்களாக குடிநீர் வீணாவதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. ஜமீன்ஊத்துக்குளி பகுதியில் ரோடு விரிவுபடுத்தும் பணி நடப்பதால், பெரும்பாலான கனரக வாகனங்கள் போடிபாளையம், குளத்துார், அம்பராம்பாளையம் வழியாக ஆனைமலை ரோட்டை அடைகின்றன. மேலும், கேரள செல்லும் வாகனங்களும், கேரளாவில் இருந்து கோவை செல்லும் வாகனங்கள் இந்த வழித்தடத்தை அதிகம் பயன்படுத்துகின்றன. வாகன போக்குவரத்து அதிகமுள்ள நிலையில், ரோடு சந்திப்பில் ஏற்பட்டுள்ள குடிநீர் குழாய் உடைப்பால் பாதிப்பு ஏற்படுகிறது. குடிநீர் வீணாவதையும், ரோடு சேதமடைவதை தடுக்கவும், வாகனங்கள் பாதிப்புக்கு உள்ளாவதை தவிர்க்கவும், குடிநீர் வடிகால்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, நிரந்தர தீர்வு காண வேண்டும். இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை