அறநிலையத்துறை சார்பில் 20 ஜோடிகளுக்கு டும் டும்
கோவை: கோவை உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோவிலில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில், 20 ஜோடிகளுக்கு, 56 சீர்வரிசை பொருட்களுடன், இலவச திருமணம் நேற்று நடத்தி வைக்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு, கோவை எம்.பி.,ராஜ்குமார் தலைமை வகித்தார். மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி,இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மணமக்களுக்கு, 4 கிராம் தங்க மாங்கல்யம், மிக்சிகிரைண்டர் உள்ளிட்ட,45 வகை சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன.இந்து சமய அறநிலையத்துறை இணைகமிஷனர் ரமேஷ் கூறுகையில், ''இரண்டாவது ஆண்டாக இந்து சமய அறநிலைத்துறை சார்பில், இலவச திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஜோடிக்கும் தலா ஒரு லட்சத்து 10ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன,'' என்றார்.