அரங்கநாதர் கோவிலில்ஏகாதசி வைபவம் கோலாகலம்
மேட்டுப்பாளையம் : காரமடை அரங்கநாதர் கோவிலில், ஐப்பசி மாத சுக்லபட்ச ஏகாதசி வைபவம் நடந்தது.கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம், காரமடை அரங்கநாதர் கோவில் ஆகும். இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் ஏகாதசி வைபவம் நடைபெறும். நேற்று ஐப்பசி மாதம் சுக்லபட்சஏகாதசி வைபவம் நடந்தது. அதிகாலையில் கோவில் நடை திறந்து மூலவர் அரங்கநாத பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து கால சந்தி பூஜை, ஆராதனம், புண்ணியா வசனம், கலச ஆவாகனம் ஆகியவையும், ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராக அரங்கநாத பெருமாளுக்கு ஸ்தபன திருமஞ்சனமும் செய்யப்பட்டது.அதன் பின் பால், தயிர், தேன், நெய், இளநீர், மஞ்சள், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களைக் கொண்டு உற்சவ மூர்த்திக்கு திருமஞ்சனம் நடந்தது. பின்பு செந்நிற பட்டு உடுத்திய அரங்கநாத பெருமாள், வெண்பட்டு குடையுடன், வெள்ளி சப்பரத்தில் மேளதாளம் முழங்க, கோவில் வளாகத்தின் உள்ளே வலம் வந்தார். பின்பு ஆஸ்தானம் எழுந்தருளிய அரங்கநாத பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராக பக்தர்களுக்கு அருள் பாலித்தார். உச்சி கால பூஜையும், வேத பாராயணம், சாற்று முறை முடிந்த பின், தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் கோவில் ஸ்தலத்தார்கள், அர்ச்சகர்கள், மிராஸ்தர்கள் உள்பட பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். ஏகாதசி வைபவ ஏற்பாட்டினை அறங்காவலர் குழு தலைவர் தேவ் ஆனந்த், அறங்காவலர்கள் ராமசாமி, கார்த்திகேயன், சுஜாதா ஜவகர், குணசேகரன், மாவட்ட அறங்காவலர் நியமனக்குழு உறுப்பினர் கவிதா கல்யாண சுந்தரம், கோவில் செயல் அலுவலர் சந்திரமதி ஆகியோர் செய்து இருந்தனர்.