உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவையில் உயிரிழந்த யானையின் வயிற்றில் குட்டி! சிசு இருந்ததே தெரியாமல் 4 நாட்கள் சிகிச்சையளித்த வனத்துறை

கோவையில் உயிரிழந்த யானையின் வயிற்றில் குட்டி! சிசு இருந்ததே தெரியாமல் 4 நாட்கள் சிகிச்சையளித்த வனத்துறை

கோவை; கோவையில், உயிரிழந்த பெண் யானை, 15 மாதம் கர்ப்பமாக இருந்தது, பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. வயிற்றுக்குள் சிசு இருப்பது கூட தெரியாமல், வனத்துறையினர் நான்கு நாட்களாக சிகிச்சை அளித்து வந்தது, கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.கோவை வனச்சரகத்துக்கு உட்பட்ட மருதமலை அடிவாரத்தில், வனப்பகுதியை ஒட்டிய நிலத்தில், 17ம் தேதி மாலை, உடல் நலக்குறைவால், ஒரு பெண் யானை கீழே விழுந்தது. அதன் குட்டி யானை சுற்றி வந்தது. கும்கி வந்தவுடன் வனத்துக்குள் சென்று மறைந்தது. நான்கு நாட்களாக பெண் யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்தனர். நேற்று முன்தினம் மாலை, 'ஹைட்ரோ தெரபி' என்ற சிகிச்சை அளித்தபோது, உயிரிழந்தது. நேற்று காலை, வனத்துறை கால்நடை மருத்துவ குழுவினர், பிரேத பரிசோதனை செய்தனர். யானையின் வயிற்றில், 15 மாத சிசு உயிரிழந்த நிலையில் இருந்ததை பார்த்ததும், வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். தாய் யானை சாணத்தில், ஏராளமான பிளாஸ்டிக் கவர்கள் கலந்திருந்தன. பரிசோதனைக்கு பின், அதே பகுதியில், குழிதோண்டி, யானையின் உடல் புதைக்கப்பட்டது.

காப்பாற்ற முடியாதது ஏன்?

வனத்துறையினர் கூறுகையில், 'கோவை வனக்கோட்டத்தில், உடல் நலக்குறைவு ஏற்பட்டு, யானைகள் உயிரிழப்பது சமீபகாலமாக தொடர்ந்து வருகிறது. அவை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது, அதன் உடலில் மாற்றம் தெரிவதில்லை. தொற்றின் பாதிப்பு முற்றி, நடக்கக் கூட முடியாமல் படுத்து விடுகின்றன. அவற்றை காப்பாற்ற சிகிச்சை அளிக்கிறோம். இருப்பினும், உள்உறுப்புகளை நோய் தொற்று செயலிழக்க வைப்பதால், உயிரிழக்கின்றன' என்றனர்.வனவிலங்கு ஆர்வலர்கள் கூறுகையில், 'பெரும்பாலான பெண் யானைகள், முதல் குட்டி ஈன்றதும், 3 முதல், 4 ஆண்டுகள் கழித்தே, அடுத்த குட்டி ஈனும் என்பது, அனைவருக்கும் தெரியும். உயிரிழந்த பெண் யானையின் முதல் குட்டிக்கு, 2 முதல் 3 வயது வரை இருக்கும். யானை கர்ப்பமாக இருந்தது வனத்துறையினருக்கு தெரியாமல் போனது அதிர்ச்சியாக உள்ளது. கர்ப்பமாக இருந்த யானைக்கு, சரியான சிகிச்சை கொடுக்கப்பட்டதா என்ற கேள்வியும் எழுகிறது' என்றனர்.

சிசு இருந்தது தெரியாதது ஏன்?

வன கால்நடை டாக்டர் சுகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:உயிரிழந்த யானைக்கு 17 வயது இருக்கும். இதயம், கல்லீரல், சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருந்தன. வயிற்றில் உணவு ஏதும் இல்லை. சிறு குடலில், சரியாக ஜீரணமாகாத பழங்கள் இருந்தன. பெருங்குடல் மற்றும் மலக்குடலில் இருந்த சாணத்தில், பிளாஸ்டிக் குப்பை அதிகமாக இருந்தது. நுண்ணுயிர் தொற்று காரணமாகவே யானை உயிரிழந்தது. உயிரிழந்த யானை உட்கொண்ட, கெமிக்கல் கலந்த பிளாஸ்டிக் காரணமாக, நுண்ணுயிர் தொற்று ஏற்பட்டு இருக்கலாம். கர்ப்பப்பையில், உயிரிழந்த நிலையில், 15 மாத சிசு இருந்தது; வண்டலுாரில் உள்ள ஆய்வகத்துக்கு ஆராய்ச்சிக்காக அனுப்ப உள்ளோம். வனப்பகுதியில், யானையின் வயிற்றில் சிசு இருப்பதை தெரிந்து கொள்ளும், நவீன தொழில்நுட்பம் எங்கும் இல்லை. அதனால், சிசு இருந்தது தெரியவில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.

சிகிச்சையில் தப்பு நடந்திருக்கு: கால்நடை டாக்டர் 'பகீர்'

பெயர் வெளியிட விரும்பாத, அரசு கால்நடை டாக்டர் ஒருவர் கூறுகையில், 'யானைகளுக்கு வியர்வை சுரப்பி இல்லை. குளூக்கோஸ் அதிகமாக ஏற்றினால், சிறுநீர் கழிக்க வேண்டும். சிறுநீர் வெளியேறாவிட்டால், கல்லீரலை சுற்றி நீர் கோர்த்து விடும். கர்ப்பமாக இருப்பதை உணராதது முதல் தவறு.யானையின் வயிற்றில் குட்டியின் நகர்வுகள் தெரியும். ரத்தத்தை ஆய்வு செய்தாலும், கர்ப்பம் தெரியும். கோவையில், தனியார் மினி எக்ஸ்ரே எடுக்கும் வசதி உள்ளது. அதன் மூலம் கர்ப்பமடைந்ததை தெரிந்திருக்கலாம். யானைக்கு பெல்ட் அணிவித்து, நிற்க வைக்கக் கூடாது. உள்ளே குட்டி எங்கும் நகர முடியாது. நடக்கும் யானைக்கு 'ஹைட்ரோ தெரபி' தரலாம். படுத்துக் கிடக்கும் யானைக்கு கொடுத்தால், திடீரென அதிர்ச்சியளிக்கும். அதனாலும், குட்டி உயிரிழந்திருக்கலாம். மருந்து அதிகரித்தும் குட்டி யானை உயிரிழந்திருக்கலாம். சிகிச்சை முறை முற்றிலும் தவறு. வெயில் காலத்தில், தீவனம் கிடைக்காமல், யானையின் வயிறு காலியாக இருந்திருக்கலாம். நீரில் இறக்கியதில், பெண் யானை அதிர்ச்சியில் உயிரிழந்திருக்கும்' என்றார்.

பெல்ட் கட்டி, தள்ளி 'ஹைட்ரோ தெரபி'

முடியாமல் படுத்துக்கிடந்த யானையின் உடலில் பெல்ட் கட்டி, கிரேனால் துாக்கி, கும்கி உதவியுடன் உந்தி விட்டு, வலுக்கட்டாயமாக வனத்துறையினர் நடக்க வைத்தனர். பின் செயற்கை குளத்தில் மூழ்க வைத்தனர். இதுவும் மரணத்துக்கு காரணமாக இருக்கலாம் என்கின்றனர் வனவிலங்கு ஆர்வலர்கள்.இது குறித்து டாக்டர் சுகுமாரிடம் கேட்டதற்கு, ''ஹைட்ரோ தெரபி என்பது, யானைகளுக்கு புத்துணர்வு அளிப்பதற்கான சிகிச்சை முறை. இம்முறையில், யானையின் தசைகளில் உள்ள அலுப்பு குறைந்து, புத்துணர்வு ஏற்படும்,'' என்று முடித்துக்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Prem
மே 22, 2025 21:33

மனித குலத்தின் எதிரி, நெகிழி. யானையின் மரணத்திற்கு நாமே காரணம்.


கஜேந்திரன்
மே 22, 2025 16:14

தத்தி டாக்டர்கள். வயிறு பெருசா இருக்கறதைப் பாத்து உப்புசம்னு சிகிச்சை குடுத்திருப்பாங்க. என்னத்தப் படிச்சாங்களோ?


சமீபத்திய செய்தி