உழவரை தேடி திட்டம் கிராமங்களில் துவக்கம்
பொள்ளாச்சி; பொள்ளாச்சி தெற்கு வட்டாரத்தில், 'உழவரை தேடி வேளாண்மை துறை' என்ற திட்டம் துவக்க விழா நடந்தது.பொள்ளாச்சி அருகே தொண்டாமுத்துாரில், 'உழவரைத்தேடி வேளாண்மை துறை' என்ற திட்ட துவக்க விழா, வேளாண் உதவி இயக்குனர் நாகபசுபதி தலைமையிலும், பழையூரில் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் வசுமதி தலைமையிலும் நடந்தது.வேளாண் உதவி இயக்குனர் கூறியதாவது:'உழவரை தேடி வேளாண்மை துறை' எனும் திட்டம், தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையின் அறிவிக்கப்பட்டது. வேளாண் விரிவாக்க சேவைகள், அரசின் மானிய திட்டங்கள் விவசாயிகளை சென்றடைவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.இத்திட்டத்தில், 15 நாட்களுக்கு ஒரு முறை ஒவ்வொரு வட்டாரத்திலும் உள்ள இரண்டு கிராமங்களில் தொடர்ச்சியாக முகாம் நடத்தப்படும்.இதில் வேளாண்துறையின் சார்பு துறைகளான, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, கால்நடைபராமரிப்புத்துறை, மீன்வளத்துறை, விதைச்சான்று, அங்ககச்சான்று, வேளாண் பல்கலை, பட்டு வளர்ச்சிதுறையினர் விவசாயிகளை நேரடியாக சந்தித்து, அவர்களுக்கு தேவையான பயிர் சார்ந்த தொழில்நுட்பங்கள், ஆலோசனைகள் வழங்குவர்.இவ்வாறு, கூறினர்.வேளாண் அலுவலர் துளசிமணி, துணை வேளாண் அலுவலர் சந்தியாகு இருதயராஜ் ஆகியோர், தொழில் நுட்பங்கள், அரசின் திட்டங்கள் குறித்து விளக்கினர்.கண்காணிப்பு அலுவலர் ஆறுமுகராஜன், உதவி கால்நடை மருத்துவர் பாரதிஸ்ரீ, கிராம நிர்வாக அலுவலர், விவசாயிகள் பங்கேற்றனர். பயனாளிகளுக்கு விதைகள், உயிர் உரங்கள், தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன. உதவி வேளாண் அலுவலர்கள் ஆனந்த்பாபு, ரசிகா ஆகியோர் நன்றி கூறினர்.