ரூ. 12 கோடி மோசடி செய்த நிதி நிறுவனம்; உரிமையாளர் மீது ஊழியர்கள் போலீசில் புகார்
கோவை; தேனி மாவட்டத்தை சேர்ந்த லீடர்மேத்யூ, 35. இவரும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த வினோத் குமார் என்பவரும் சேர்ந்து, கோவை நவ இந்தியா பகுதியில், 'புளூ டைமண்ட் கேபிட்டல்' என்ற நிறுவனத்தை துவங்கினர்.நிதி நிறுவனத்தினர், முதலீட்டு பணத்தை பங்கு சந்தையில் போட்டு லாபம் ஈட்டி, அதில் ஒரு பகுதியை மூதலீடு செய்தவர்களுக்கு வட்டியாக வழங்கி வந்தனர். மொத்தம் 560 பேர், சுமார், ரூ. 12 கோடி வரை முதலீடு செய்துள்ளனர். மாதா மாதம் பணத்தை கொடுத்து வந்த நிறுவனத்தினர் கடந்த எட்டு மாதங்களாக முதலீட்டாளர்களுக்கு பணத்தை கொடுக்கவில்லை.ஊழியர்களுக்கு கடந்த எட்டு மாதங்களாக சம்பளம் கொடுக்கவில்லை.இதனால், முதலீடு செய்தவர்கள் நிறுவன ஊழியர்களிடம் பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளனர். இது குறித்து, உரிமையாளர் மேத்யூவிடம் தெரிவிக்க ஊழியர்கள் போனில் அழைத்த போது, அவர் அழைப்பை துண்டித்துள்ளார். பல முறை போன் செய்தும் அவர் எடுக்கவில்லை.முதலீடு செய்தவர்கள் ஊழியர்களிடம் பணம் கேட்பதால், பதிலளிக்க முடியாத ஊழியர்கள் நேற்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தனர். கமிஷனர் இல்லாததால், துணை கமிஷனர் ஸ்டாலினிடம் அவர்கள் புகார் மனுவை கொடுத்துச் சென்றனர்.