கோவை:''தமிழக அமைச்சர்களை இனி சிறையில் தான் பார்க்க வேண்டிய சூழல் ஏற்படும்,'' என, சிங்காநல்லுார் எம்.எல்.ஏ., ஜெயராம் பேசினார்.பட்டியலின பெண் தாக்கப்பட்டதைக் கண்டித்து, கோவை மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், செஞ்சிலுவைச் சங்கம் அருகில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் மேயர் வேலுசாமி முன்னிலை வகித்தார்.இதில், சிங்காநல்லுார் எம்.எல்.ஏ., ஜெயராம் பேசுகையில், ''விமான நிலைய விரிவாக்கத்துக்கு கையகப்படுத்திய நிலங்களை ஒப்படைக்காமல் தி.மு.க., அரசு தாமதித்து வருகிறது. அவிநாசி - அத்திக்கடவு திட்டம் இன்னும் செயல்படுத்தாமல் இருக்கிறது. இனி, தி.மு.க., அமைச்சர்களை புழல் சிறையில் தான் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்,'' என்றார்.மாநகர் மாவட்ட செயலரான, எம்.எல்.ஏ., அம்மன் அர்ச்சுனன் பேசியதாவது:தி.மு.க., ஆட்சியில் குற்றவாளிகளுக்கே போலீசார் பாதுகாப்பு தருகின்றனர். புகார் கொடுப்போரை கைது செய்கின்றனர். விரைவில், 13 அமைச்சர்கள் சிறைக்கு செல்வர்.எம்.ஜி.ஆரை பற்றி பேசுவதற்கு ஆ.ராஜாவுக்கு தகுதியில்லை. அவரை வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு முற்றுகை போராட்டம் நடத்துவோம். தி.மு.க., தலைவர் கருணாநிதியே, எம்.ஜி.ஆர்., தயவால் தான் முதல்வரானார். அவரது இல்லம் ஏலத்துக்கு வந்தபோது, எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெ., இருவரும் இணைந்து திரைப்படம் நடித்துக் கொடுத்து, மீட்டுக் கொடுத்தனர்.அ.தி.மு.க., ஆட்சியில் கோவையில் ரோடு பளபளப்பாக இருந்தது. இப்போது குண்டும் குழியுமாக இருக்கிறது. குப்பைக்கு வரி போடுகிறார்கள். ஆனாலும், அவற்றை அள்ளாததால், குப்பை நகரமாகி விட்டது. அமைச்சருக்கு வேண்டப்பட்ட நிறுவனத்துக்கு குப்பை அள்ளும் பணி வழங்கி, ஆண்டுக்கு ரூ.172 கோடியை கொடுக்கின்றனர். தற்போது, 15 நாட்களுக்கு ஒருமுறையே குடிநீர் வருகிறது. பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.,வுக்கு மக்கள் அடி கொடுப்பார்கள்.இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்தில், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மகேஸ்வரி, சின்னசாமி, மாணவரணி செயலர் சந்திரசேகர், கவுன்சிலர் பிரபாகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.