கிராமங்களில் குப்பை கழிவுகள்: மாசுபடும் நீர்நிலைகள்
பொள்ளாச்சி,; பொள்ளாச்சி அருகே, சோமந்துறைசித்துார் ஓடையில் குப்பை கொட்டப்படுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் உள்ள ஆறுகள், குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் மனிதர்களுக்கு மட்டுமின்றி கால்நடைகள், பறவைகளுக்கும் குடிநீர் ஆதாரமாக உள்ளது. ஆனால், நீர்நிலைகள் ஒட்டிய பகுதிகளில், குப்பை உள்ளிட்ட கழிவுகள் கொட்டப்படுவது அதிகரித்துள்ளது.இதனால், நீர்நிலைகளின் பரப்பு குறைந்து, தேங்கும் தண்ணீர் மாசடைகிறது. இயற்கையான ஆறு, குளங்களில் காணப்படும் மீன், நண்டு, ஆமை உள்ளிட்ட உயிரினங்கள், தண்ணீர் மாசு அடைவதால் இறக்கும் நிலை உள்ளது. இந்நிலையில், சோமந்துறைசித்துார் ஓடையில் கிராமங்களில் சேகரமாகும் குப்பைகள், கொட்டப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.மக்கள் கூறியதாவது: கிராமங்களில் சேகரமாகும் பிளாஸ்டிக் மற்றும் குப்பை கழிவுகள், கட்டடக் கழிவுகள், இந்த நீர்நிலையில் கொட்டுகின்றனர். மழையின்போது, நீரோட்டம் தடுக்கப்பட்டு, சுற்றுப்பகுதிகளில் புகுந்து விடும் அபாயம் உள்ளது.இதை தடுக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதில்லை. குறிப்பாக, குடியிருப்பு கழிவுகள் முறையாக அகற்றப்படுவதும் கிடையாது. அனைத்து தரப்பு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.நீர்நிலைகள் அருகில் வசிக்கும் மக்கள் இதனை கண்காணித்து, கழிவு கொட்டுவது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க வேண்டும். நீர்நிலைகளை மாசுபடுத்த கூடாது என ஊராட்சி நிர்வாகமும் எச்சரிக்கை பலகைகளை வைக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.