உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காஸ் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து; கோவையில் 11 மணி நேரம் திக்... திக்...

காஸ் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து; கோவையில் 11 மணி நேரம் திக்... திக்...

கோவை; கொச்சியில் இருந்து காஸ் ஏற்றி வந்த டேங்கர் லாரி, கோவை உப்பிலிபாளையம் மேம்பாலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் பள்ளிகள், கடைகள், வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன. காஸ் கசிவால் ஏற்படும் பாதிப்பை தடுக்க, மின்சார பணிகள் நிறுத்தப்பட்டன.கேரள மாநிலம் கொச்சியில் இருக்கும், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் இருந்து சுமார் 18 மெட்ரிக் டன் காஸ் ஏற்றிக்கொண்டு, 'ஜோதி எல்.பி.ஜி.,' என்ற டேங்கர் லாரி (TN 28 BK 3540) கோவை கணபதி, எப்.சி.ஐ., ரோட்டில் உள்ள பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை நோக்கி வந்தது. லாரியை தென்காசி மாவட்டம், கடையநல்லுார், சிவராம பேட்டையை சேர்ந்த ராதாகிருஷ்ணன், 29 ஓட்டி வந்தார்.நேற்று அதிகாலை சுமார், 3:00 மணியளவில் கோவை அவிநாசி சாலை, உப்பிலிபாளையம் மேம்பால வளைவில், டிரைவர் டேங்கர் லாரியை திருப்ப முயன்றார். கட்டுப்பாடு இழந்த லாரியின், டேங்கர் இருக்கும் பகுதி இடது புறமாக சாய்ந்தது. இதில், லாரியின் முன்பகுதியையும், டேங்கர் பகுதியையும் இணைக்கும் (டேர்ன் பிளேட் பின்) பாகம் உடைந்தது. இதனால், காஸ் நிரம்பிய டேங்கர் சாலையில் கவிழ்ந்தது.

காஸ் கசிவால் பரபரப்பு

டேங்கரில் இருந்து அளவீடு மீட்டர் (பிரஷர் காஜ்) உடைந்து, அதன் வழியாக காஸ் கசிந்தது. பதறிப்போன டிரைவர் ராதாகிருஷ்ணன், போலீசுக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த, தீயணைப்பு துறையினர், ஐந்து தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன், காஸ் கசிவு ஏற்பட்ட இடத்தில், தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். கசிவு ஏற்பட்ட இடத்தில், 'சாப்ட் வுட்' எனப்படும் கட்டையை பயன்படுத்தி, துளையை ஓரளவு அடைத்தனர். பின்னர், 'கோல்டு வெல்டிங்' மூலம், 'பாஸ்ட் ஸ்டீல் எப்பாக்ஸி ஸ்டிக்' பயன்படுத்தி, கசிவு ஏற்பட்ட இடத்தை, முற்றிலும் அடைத்தனர். காஸ் கசிவால் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க, அப்பகுதியை சுற்றிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அருகில் இருந்த வீடுகளில் தீப்பற்றும் விதமாக, எந்த வேலையும் செய்ய வேண்டாம் என, மாநகராட்சி சார்பில் 'மெகாபோன்' வாயிலாக அறிவுறுத்தப்பட்டது.போலீசார், தீயணைப்புத் துறையினர், மாநகராட்சி ஊழியர்கள், மாவட்ட தொழில் பாதுகாப்பு துறையினர், நெடுஞ்சாலை துறையினர் இணைந்து, கவிழ்ந்து கிடந்த லாரியை, மூன்று கிரேன்கள் உதவியுடன் நேராக நிமிர்த்தினர். இதையடுத்து, விபத்துக்குள்ளான லாரி சம்பவ இடத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டது. டேங்கரை கொண்டு செல்ல, வேறு லாரி கொண்டு வரப்பட்டது.

திருச்சியில் இருந்து மீட்பு வாகனம்

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருச்சியில் இருந்து இந்தியன் ஆயில் நிறுவனத்தின் மீட்பு வாகனம் (ரேபிட் ரெஸ்பான்ஸ் சிஸ்டம்) கொண்டு வரப்பட்டது.காஸ் உள்ள டேங்கரையும், லாரியின் முன் பகுதியையும் இணைக்கும் பாகம் உடைந்திருந்ததால், புதிதாக (டேர்ன் பிளேட் பின்) பாகத்தை கொண்டு வந்தனர். அதை டேங்கர் லாரியில் பொருத்தி, டேங்கரை லாரியின் முன்பகுதியுடன் இணைத்தனர்.டேங்கரில் இருந்து கசிவு ஏற்படுகிறதா என, பொறியாளர்கள் ஆய்வு செய்தனர். அதன் பின்னர், தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் மற்றும் போலீஸ் வாகன பாதுகாப்புடன், டேங்கர் லாரி கணபதியில் உள்ள, பாரத் பெட்ரோலியம் நிறுவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. காஸ் கசிவால் எந்தவித பாதிப்பும் ஏற்படாததால், அனைவரும் நிம்மதி அடைந்தனர்.மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் கூறுகையில், ''போலீசார், தீயணைப்புத்துறையினர் துரிதமாக செயல்பட்டு, காஸ் கசிவை சரி செய்தனர். அவிநாசி சாலை மேம்பாலம் பணியில், ஈடுபடுத்தப்பட்டிருந்த இரண்டு உயர்ரக கிரேன்கள் வரவழைக்கப்பட்டன. காலை முதல் மதியம் வரை, சுமார் 11 மணி நேரம், பணியாற்றிய போலீஸ், தீயணைப்புத்துறை, தொழில் பாதுகாப்பு துறையினர், நெடுஞ்சாலைத்துறையினர், மாநகராட்சி பணியாளர்கள், தன்னார்வலர்கள் என, அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்,'' என்றார்.சம்பவ இடத்தில், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், எம்.பி., ராஜ்குமார் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

பள்ளிகளுக்கு விடுமுறை

லாரி கவிழ்ந்து காஸ் கசிவு ஏற்பட்டதால், சம்பவ இடத்தை சுற்றிலும் உள்ள, சுமார் 15 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பள்ளிகளில் குழந்தைகளை இறக்கி விட்ட பெற்றோருக்கு, தகவல் தெரிவிக்கப்பபட்டது. பதறியடித்து வந்த பெற்றோர், பிள்ளைகளை பத்திரமாக அழைத்துச் சென்றனர். அதுவரை வகுப்பறை ஜன்னல், கதவுகள் இறுக அடைக்கப்பட்டன. இப்பகுதியில் இருந்த கடைகள், வணிக நிறுவனங்கள், டீ கடைகள், பேக்கரிகள் அனைத்தும் மூட உத்தரவிடப்பட்டது.

அலட்சியத்தால் விபத்து

18 டன் காஸ் நிரப்பிய கனரக வாகனம் என்பதால், பை பாஸ் சாலையில் சென்றிருக்க வேண்டும். பக்கமாக இருக்கும் என்பதாலும், அதிகாலை நேரம் என்பதால் வாகனங்கள் அதிகம் இருக்காது எனவும் நினைத்து, டிரைவர் அலட்சியமாக மாநகர பகுதிக்குள் வந்துள்ளார். வளைவுகள் நிறைந்த சாலைகளில் வந்த வாகனம், மேம்பாலத்தில் வளையும் இடத்தில், கட்டுப்பாட்டை இழந்து உள்ளது.

'விசாரணை நடக்கிறது'

மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் கூறுகையில், ''பாலத்தில் சம்பவம் நடைபெற்றதால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. சம்பவத்தின் தீவிரத்தன்மையை அறிந்த பொதுமக்கள், நன்கு ஒத்துழைத்தனர். வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிற துறைகளின் விசாரணைக்கு பிறகு, காரணம் கண்டறியப்படும். அதன் பின், மேற்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என்றார்.

'விரைந்து செல்ல முயன்றேன்'

டேங்கர் லாரி டிரைவர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ''கடந்த 10 ஆண்டுகளாக டிரைவராக பணியாற்றி வருகிறேன். உக்கடம் வழியாக அவிநாசி சாலை மேம்பாலத்தை கடந்து, விரைவாக கணபதிக்கு சென்று விடலாம் என்று கருதி, மேம்பாலம்வழியாக வந்தேன். மேம்பாலத்தின் மேலே ஏறும்போது திடீரெனலாரியையும், டேங்கரையும் இணைக்கும் பாகம் உடைந்ததால், டேங்கர் தனியாக கழன்று சாலையில் கவிழ்ந்தது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

sivu, chennai
ஜன 04, 2025 07:33

ஆபத்து இல்லாமல் இந்த நிலைமையை திறமையாக கையாண்டு மீட்புப்பணி செய்த பேரிடர் மீட்புக்குழு, ஆட்சியர், காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் ஆயில் நிறுவன அதிகாரிகளுக்கு பாராட்டுக்கள்..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை