குளோபல் சோலார் கண்காட்சி கோவையில் நாளை துவக்கம்
கோவை; கோவை, கொடிசியா 'டி' அரங்கில், குளோபல் சோலார் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நாளை மற்றும் நாளை மறுதினம் நடக்கிறது. 'சி2இசட் மற்றும் ஈக்மேக்புரோ' சேர்மன் ஆனந்த் குப்தா, கோவையில் நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது: கோவை, கொடிசியா 'டி' அரங்கில், 11, 12 ஆகியஇரு தினங்கள் குளோபல் சோலார் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடக்கிறது. காலை 9.30 முதல் மாலை 6.30 மணி வரை நடக்கும் இக்கண்காட்சியில், 75க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் இடம்பெறுகின்றன. வணிக, தொழில் மற்றும் வீட்டு பயனாளர்கள், முன்னணி சோலார் நிறுவனங்களை நேரடியாக சந்தித்து பயன்பெறலாம். நிதியாளர்கள், முதலீட்டாளர்கள், பயன்பாட்டு நிறுவனங்கள் மற்றும் நிபுணர்கள் பங்கேற்கின்றனர். 50க்கும் மேற்பட்டோர் சோலார் குறித்த கருத்தரங்கில் விளக்கம் அளிக்க உள்ளனர். சோலார் மேற்கூரை அமைப்பவர்களுக்கு, 200 சதவீதம் வரை 'கேஸ் பேக்' உட்பட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட உள்ளன. எரிபொருள் தேவைகக்காக ஆண்டுதோறும் ரூ.10 லட்சம் கோடிக்கும் அதிகமாக வெளிநாடுகளுக்கு செலவு செய்கிறோம். சோலார் வாயிலாக இச்செலவை குறைக்க முடியும். சோலாரால் இயங்கும் மின் வாகனங்கள், எரிபொருள் இறக்குமதி குறைப்பு மற்றும் சுத்தமான ஆற்றல் ஆகியனவே எங்களது நோக்கம். இவ்வாறு, அவர் கூறினார்.