வெளிநாட்டு சைக்கிளுடன் போட்டியிட முடியாத அரசு பள்ளி மாணவர்கள் சைக்கிள்
அன்னுார்; தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில், ஒவ்வொரு ஆண்டும், குடியரசு தின விழா விளையாட்டுப் போட்டிகள் குறுமைய அளவிலும், கல்வி மாவட்டம், வருவாய் மாவட்டம் மற்றும் மாநில அளவில் நடைபெறுகிறது. தமிழ்நாடு சைக்கிள் கழகம் சார்பிலும் பிற அமைப்புகள் சார்பிலும் மாவட்ட, மாநில அளவில் சைக்கிள் போட்டிகள் நடைபெறுகிறது. இதில் அரசு பள்ளி மாணவர்கள் அதிக அளவில் சாதிக்க முடிவதில்லை.இது குறித்து உடற்கல்வி ஆசிரியர்கள் கூறியதாவது :மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளியில் படிக்கும் வசதியான மாணவ, மாணவியர், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார்பன் வீல்கள் பொருத்தப்பட்ட சைக்கிள்களை போட்டியில் பயன்படுத்துகின்றனர். ஆனால் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் படித்து வரும் மாணவ, மாணவியர் 5,000 ரூபாய் மதிப்புள்ள சாதாரண சைக்கிள்களை போட்டியில் பயன்படுத்துகின்றனர். இதனால் நவீன இறக்குமதி செய்யப்பட்ட சைக்கிள்களின் வேகத்துடன் போட்டி போட முடியாமல் பின் தங்குகின்றனர். மாவட்ட அளவில் சில மாவட்டங்களில் இரண்டாம், மூன்றாம் இடம் பெறுகின்றனர். ஆனால் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியரின் பட்டியலில் ஒருவர் கூட அரசு பள்ளி மாணவர்கள் இருப்பதில்லை. இதே போல் தேசிய அளவிலான போட்டியிலும் தமிழகத்தில் இருந்து அரசு பள்ளி மாணவர்கள் சாதிப்பதில்லை. இந்த நிலை மாறுவதற்கு, அரசு பள்ளியில் திறமையுள்ள மாணவ, மாணவியரை கண்டறிந்து, அவர்களுக்கும், தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க நவீன இறக்குமதி செய்யப்பட்ட சைக்கிள்கள் வழங்க வேண்டும். இல்லாவிட்டால் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனியாகவும், மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்களுக்கு தனியாகவும் சைக்கிள் போட்டி நடத்த வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.