கூடைப்பந்து போட்டியில் அரசுப்பள்ளி மாணவர்கள் அசத்தல்
கோவை; மதுக்கரை குறுமைய விளையாட்டு போட்டிகள் ரத்தினம் கல்லுாரியில் நடந்தது. ஒத்தக்கால்மண்டபம் அரசு மேல்நிலைப் பள்ளி சார்பில் மூன்று நாட்கள் நடந்த போட்டிகளில், 43 பள்ளிகளை சேர்ந்த, 1,000 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். கேரம், கால்பந்து அடுத்து நடந்த கூடைப்பந்து போட்டிகளை, அரசு மேல்நிலைப் பள்ளி நலக்குழு தலைவர் சிவக்குமார் துவக்கிவைத்தார். இதில், 14 மற்றும், 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான இறுதிப்போட்டியில், ஸ்ரீ பி மல்லையன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதலிடத்தையும், நிர்மலா மாதா பள்ளி அணி இரண்டாம் இடத்தை தட்டிசென்றன. மாணவியருக்கான தனிநபர் பேட்மின்டன் போட்டியில் (14 வயதுக்குட்பட்ட) ஸ்ரீ பி மல்லையன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதலிடத்தையும், பி.எம்.ஜி., பள்ளி இரண்டாம் இடத்தையும் பிடித்தன. இரட்டையர் பிரிவில் பி.எம்.ஜி., பள்ளியும், குளோபல் பாத்வேஸ் பள்ளியும் முதல் இரு இடங்களை பிடித்தன. அதேபோல், 17 வயதுக்குட்பட்ட தனிநபர் பிரிவில், பி.எம்.ஜி., பள்ளி, வெள்ளலுார் என்.எம்.சி., அணி ஆகியன முதல் இரு இடங்களையும், இரட்டையர் பிரிவில் பி.எம்.ஜி., பள்ளி அணியும், வெள்ளலுார் என்.எம்.சி., பள்ளி அணியும் முதல் இரு இடங்களை தட்டிசென்றன. தொடர்ந்து, 19 வயதுக்குட்பட்டோர் தனிநபர் பிரிவில் ஸ்ரீ பி மல்லையன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, வெள்ளலுார் என்.எம்.சி., பள்ளி அணி ஆகியன முதல் இரு இடங்களையும், இரட்டையர் பிரிவில் வெள்ளலுார் என்.எம்.சி., அணியும், ஸ்ரீ பி மல்லையன் பள்ளி அணியும் முதல் இரு இடங்களையும் பிடித்தன. மாணவியருக்கான தனிநபர்(14 வயதுக்குட்பட்ட) கேரம் போட்டியில், ஒத்தக்கால்மண்டபம் அரசுப் பள்ளி, பிச்சனுார் அரசுப் பள்ளி ஆகிய அணிகள் முதல் இரு இடங்களையும், இரட்டையர் பிரிவில் ஒத்தக்கால்மண்டபம் அரசுப் பள்ளி, ஸ்ரீ சக்தி மெட்ரிக் பள்ளி ஆகியன முதல் இரு இடங்களையும் பிடித்தன. மேலும், 17 வயதுக்குட்ட தனிநபர் பிரிவில், வெள்ளலுார் அரசுப் பள்ளி, ஸ்ரீ பி மல்லையன் பள்ளி ஆகியன முதல் இரு இடங்களையும், இரட்டையர் பிரிவில் கலைவாணி பள்ளி, வெள்ளலுார் அரசுப் பள்ளி ஆகியன முதல் இரு இடங்களை பெற்றன.