உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குடிநீர் குழாய் பதிக்கும் பணி பாதியில் நிறுத்தம்; மக்கள் பிரச்னையில் அக்கறை காட்டாத நகராட்சி

குடிநீர் குழாய் பதிக்கும் பணி பாதியில் நிறுத்தம்; மக்கள் பிரச்னையில் அக்கறை காட்டாத நகராட்சி

வால்பாறை; வால்பாறையில், புதிய குடிநீர் குழாய் பதிக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டதால், எஸ்டேட் தொழிலாளர்களும், வாகன ஓட்டுநர்களும் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.வால்பாறை நகருக்கு, 8 கி.மீ., தொலைவில் உள்ள அக்காமலை செக்டேமில் இருந்து, குழாய் வாயிலாக தண்ணீர் கொண்டு வந்து, தொட்டியில் தேக்கி வைத்த பின், வீடு மற்றும் கடைகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.வால்பாறை நகரில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில், கடந்த சில மாதங்களாக குடிநீர் தட்டுப்பாட்டால் கடும் அவதிக்குள்ளாகினர். பழைய குடிநீர் குழாய் அடிக்கடி பழுதடைவதால், நகரில் குடிநீர் தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை.இதனிடையே, குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், அக்காமலை செக்டேமில் இருந்து, வால்பாறை நகர் வரை பழைய குழாய்களை மாற்றி, புதிய குழாய் அமைக்கும் பணி கடந்த ஆண்டு துவங்கப்பட்டது.ஆனால், ஆமை வேகத்தில் பணி நடப்பதாலும், குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட குழிகள், பல்வேறு இடங்களில் மூடப்படாமல் உள்ளதாலும், எஸ்டேட் தொழிலாளர்களும், வாகன ஓட்டுநர்களும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.எஸ்டேட் தொழிலாளர்கள் கூறியதாவது:புதிய குழாய் பதிப்புக்காக, கருமலை, பச்சமலை, நடுமலை ஆகிய எஸ்டேட் பகுதியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை ரோட்டை சேதப்படுத்தி, குழி தோண்டப்படுகிறது. குழாய் பதிப்புக்கு பின், குழி மூடாமல் உள்ளது.இதனால், இரவு நேரங்களில் நடந்து செல்லும் தொழிலாளர்கள், தவறி விழுந்து காயமடைகின்றனர். நகராட்சி அதிகாரிகளின் அலட்சியத்தால், தொழிலாளர்கள் நடந்து செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.இது குறித்து, பல முறை புகார் தெரிவித்தும் நகராட்சி அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குழாய் பதிப்பினால் எஸ்டேட் தொழிலாளர்கள் படும் கஷ்டத்தை அதிகாரிகள் புரிந்து கொண்டு, தோண்டப்பட்ட குழியை உடனடியாக மூட வேண்டும்.இவ்வாறு, கூறினர்.நகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, 'வால்பாறை நகர் பகுதி மக்களின் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், ஒரு கோடியே, 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 8 கி.மீ., துாரத்துக்கு புதிய குழாய் அமைக்கும் பணி நடக்கிறது.தொடர்ந்து மழை பெய்ததால், பணி மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வெயில் காலம் துவங்கியதால், விரைவில் பணிகள் தீவிரப்படுத்தப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை