இடியுடன் பெய்த கனமழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு
வால்பாறை,: வால்பாறையில் இடியுடன் கனமழை பெய்வதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.வால்பாறையில் கடந்த ஜூன் மாதம் முதல் தென்மேற்குப்பருவ மழை தொடர்ந்து பெய்தது. இதனால், பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் உள்ள, சோலையாறு, மேல்ஆழியாறு, ஆழியாறு, பரம்பிக்குளம் உள்ளிட்ட அனைத்து அணைகளும் நிரம்பின. இதனால், பி.ஏ.பி., பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.இந்நிலையில், வால்பாறையில் நேற்று முன்தினம் முதல் இடியுடன் கனமழை பெய்து வருகிறது. பரவலாக பெய்யும் கனமழையினால், வால்பாறை மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டடது. கனமழையால் சுற்றுலாபயணியர் வெளியிடங்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.கனமழை பெய்யும் நிலையில், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 159.52 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 231 கனஅடி தண்ணீர் வரத்தாக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு, 418 கனஅடி தண்ணீர் வீதம் பரம்பிக்குளம் அணைக்கு திறந்து விடப்படுகிறது. அதிகபட்சமாக சோலையாறு அணைப்பகுதியில், 17 மி.மீ., மழையளவு பதிவானது.