கார் ஓட்டும் சிறார்கள் அதிகரிப்பு; போலீசார் கண்காணிப்பு அவசியம்
பொள்ளாச்சி; பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதியில், சமீபகாலமாக சிறார்கள், பைக் மட்டுமின்றி கார் ஓட்டுவதையும் வாடிக்கையாக்கி வருகின்றனர்.மோட்டார் வாகன விதிப்படி, பைக் மற்றும் கார் ஓட்ட வேண்டுமெனில், 18 வயது நிறைவடைய வேண்டும். ஆனால், பெற்றோர்கள் பலரும், தங்களது மகன் அல்லது மகள், சிறு வயதில் கார், பைக் ஓட்டுவதை பெருமையாக கருதி, வாகனங்களை ஒப்படைக்கின்றனர்.பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதிகளில், பைக் மற்றும் கார் ஓட்டும் சிறார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பைக்கை பொறுத்தமட்டில், டிரைவிங் லைசென்ஸ் இல்லாமலும், ெஹல்மெட் அணியாமலும் ஒன்றிற்கும் மேற்பட்ட நண்பர்களை பின்னால் அமர வைத்துச் செல்கின்றனர். இதுஒருபுறமிருக்க, நெரிசல் மிக்க ரோடுகளில் சிறார்கள் அதிகளவில் கார் ஓட்டிச் செல்கின்றனர்.தன்னார்வலர்கள் கூறியதாவது: மாணவர்கள், இருசக்கர வாகனம் ஓட்டக் கூடாது என, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பெற்றோர் சந்திப்பு கூட்டங்கள் வாயிலாக தெரிவிக்கப்படுகிறது. போக்குவரத்து போலீசாரும் பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துகின்றனர்.அதனை, பெரும்பாலான மாணவர்களும், பெற்றோரும் மதிப்பதில்லை. அதிவேகமாக பைக் மற்றும் கார் ஓட்டும் சிறார்கள், மற்ற வாகன ஓட்டுநர்களை பதற வைக்கின்றனர். பைக்கை மடக்கிப் பிடிக்க முற்படும் போலீசார், இனி கார்கள் மீதும் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். ஓட்டுநர், பழகுநர் உரிமம் பெறாமல் பைக், கார் ஓட்டும் சிறார்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.