கோவை: ஆர்ப்பாட்டம் என்கிற பெயரில் அரசியல் கட்சியினர் கோவையில் நடத்தும் போராட்டங்களினால் மக்கள் வதைக்கப்படுகின்றனர். மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை கருத்தில் கொண்டு, இதுபோன்ற போராட்டங்களை நகர்ப்பகுதியில் நடத்த இனி வரும் காலங்களில் காவல்துறை அனுமதி அளிக்கக் கூடாது.மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியதை கண்டித்து, தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் கோவை செஞ்சிலுவை சங்கம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 1,250 பெண்கள் உட்பட, 2,500 பேர் பங்கேற்றனர். இவர்களுக்காக, செஞ்சிலுவை சங்கம் ரவுண்டானா பகுதியில் இருந்து ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷன் வரையிலான ரோடு மறிக்கப்பட்டு, ஆர்ப்பாட்டத்துக்கு இடவசதி செய்து கொடுக்கப்பட்டது. இருபுறமும் போலீசார் நின்று, வாகனங்களை மாற்று வழிகளில் திருப்பி விட்டனர்.ரேஸ்கோர்ஸ் மற்றும் அரசு கலை கல்லுாரி ரோட்டில் இருந்து ஒசூர் ரோடு வழியாக செல்ல வேண்டிய வாகன ஓட்டிகள், உப்பிலிபாளையம் சென்று ரவுண்டானா சுற்றிச் செல்ல அறிவுறுத்தப்பட்டனர். செஞ்சிலுவை சங்கத்தில் இருந்து ஒசூர் ரோடு வழியாக எல்.ஐ.சி., சந்திப்பு வந்து காந்திபுரம் செல்ல முடியவில்லை. அனைத்து வழித்தடங்களில் வந்த வாகனங்களும் உப்பிலிபாளையம் சந்திப்புக்குச் சென்று திரும்ப வேண்டியிருந்ததால், அவ்விடத்தில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.அவிநாசி ரோடு பழைய மேம்பாலத்தின் சுரங்கப்பாதை, உப்பிலிபாளையம் சந்திப்பு, எல்.ஐ.சி., சந்திப்பு, நஞ்சப்பா ரோடு, வ.உ.சி., பூங்கா அருகே குண்டுவெடிப்பு வழக்கு விசாரித்த நீதிமன்றம் எதிரே என பல்வேறு இடங்களிலும் போக்குவரத்து ஸ்தம்பித்தது. காலை 10 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை 2 மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதேபோல், சில நாட்களுக்கு முன், வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்தப் பணியை கண்டித்து, டாடாபாத் சிவானந்தா காலனி பகுதியில் தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினரால் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அப்போதும் இதேபோல் ரோடுகள் மறிக்கப்பட்டு, வாகனங்கள் மாற்று வழித்தடத்தில் அனுப்பப்பட்டன.அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்துவதற்கு ரேஸ்கோர்ஸ் செஞ்சிலுவை சங்கம், டாடாபாத் பவர் ஹவுஸ் மற்றும் உக்கடம் பேக்கரி அருகே போலீஸ் தரப்பில் அனுமதி தரப்படுகிறது. இவ்விடங்கள் எப்போதும் வாகன போக்குவரத்து காணப்படுபவை. போக்குவரத்து ஸ்தம்பித்து பஸ்கள் ஆங்காங்கே தேங்கி விடுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.வேலைக்குச் செல்லவோ, வீட்டுக்குத் திரும்பி வருவதற்கோ சரியான நேரத்துக்கு பஸ்கள் கிடைக்காமல் அவஸ்தைப்படுகின்றனர். சில நேரங்களில் நடந்தே வீட்டுக்குச் செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதுபோன்ற சிரமங்களை நினைத்துப் பார்த்து, ஆர்ப்பாட்டம் நடத்தும் இடங்களை புறநகர் பகுதிகளாக தேர்வு செய்ய வேண்டும். மக்களுக்கு தொந்தரவு இல்லாத இடங்களையே போக்குவரத்து போலீசார் ஒதுக்க வேண்டும். இனியாவது இவ்விஷயத்தில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டுமென வாகன ஓட்டிகள் விரும்புகின்றனர். இல்லையெனில், போலீஸ் மீது மட்டுமின்றி ஆளுங்கட்சியினர் மீதுதான் மக்களுக்கு வெறுப்பு ஏற்படும்.
பஸ்கள் அனுப்பி அழைத்து வருவதேன்
டாடாபாத் சிவானந்தா காலனியில் கடந்த முறை தி.மு.க., கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு மற்றும் தனியார் பஸ்களில் ஆட்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தனியார் பஸ்கள் மற்றும் ஆம்னி பஸ்கள் பயன்படுத்தப்பட்டன. வெளியூரில் இருந்து ஏராளமான மக்கள் அழைத்து வரப்பட்டு இருந்தனர். சமீபத்தில் ஓரணியில் தமிழ்நாடு என்கிற இயக்கம் நடத்தப்பட்டு தி.மு.க.,வுக்கு ஆட்கள் சேர்க்கப்பட்டனர். ஒவ்வொரு தொகுதியிலும் லட்சக்கணக்கானோர் சேர்ந்ததாக கணக்கு காட்டப்பட்டது. அவர்கள் எங்கே என்கிற கேள்வி எழுகிறது. ஏனெனில், மாநகராட்சி பகுதியில் 100 வார்டுகள் உள்ளன. வார்டுக்கு 50 பேர் கட்சியில் இருந்து வந்தாலே 5,000 பேர் வரலாம். வந்ததோ, 2,500 பேரே. இவ்வளவு கூட்டத்தை பஸ்களை அனுப்பி தான், திரட்டி வர வேண்டுமா, ஆளுங்கட்சி மற்றும் கூட்டணி கட்சியினர் தானே... தாமாக எழுச்சியோடு வர மாட்டார்களா என்கிற கேள்வியும் மக்கள் மன்றத்தில் எழுந்திருக்கிறது.