உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கல்பாத்தி விஸ்வநாதர் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றம்

கல்பாத்தி விஸ்வநாதர் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றம்

பாலக்காடு: பாலக்காட்டில் பிரசித்தி பெற்ற, கல்பாத்தி விஸ்வநாதர் கோவில் தேர் திருவிழாவுக்கு நேற்று கொடியேற்றம் நடந்தது. கேரள மாநிலம், பாலக்காட்டில் கல்பாத்தி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவிலில் ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் தேர் திருவிழா விமரிசையாக நடக்கும். நடப்பாண்டு தேர் திருவிழாவில், நேற்று காலை, 7:30 மணிக்கு வாஸ்து சாந்தி, வாஸ்து ஹோமம், வாஸ்து பலி, வேத பாராயணம் ஆகியவை நடந்தது. காலை, 11:34 மணிக்கு 'சிவசிவ சங்கர ஹரஹர சங்கர', 'கைலாசபதை' ஆகிய கோஷங்கள் முழங்க கோவில் மேல்சாந்தி பிரபு சேனாபதி தலைமையில் கொடியேற்றம் நடந்தது. விழா நடக்கும் உப கோவில்களான, மந்தக்கரை மகா கணபதி கோவிலில் குமார் சிவாச்சாரியார் தலைமையிலும், பழைய கல்பாத்தி லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் ராமமூர்த்தி பட்டாச்சாரியார் தலைமையிலும், சாத்தபுரம் பிரசன்ன மஹா கணபதி கோவிலில் ஸ்ரீகாந்த் பட்டாச்சார்யார் தலைமையிலும் கொடியேற்றம் நடந்தது. தேர் திருவிழாவை முன்னிட்டு, மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு கவுன்சில் கலாசாரத் துறையின் ஒத்துழைப்புடன், ஐந்து நாட்களில் நடக்கும் சங்கீத உற்சவம், இன்று மாலை 6:00 மணிக்கு நடக்கிறது. வரும், 14, 15, 16 தேதிகளில், திருத்தேரோட்டம் நடத்தப்படுகிறது. திருவிழாவின் சிறப்பு அம்சங்களில் ஒன்றான ரத சங்கமம், வரும் 16ம் தேதி மாலை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை