பஸ்சை அடமானம் வைத்து ரூ.45 லட்சம் கடன் பெற்றவர் கைது
கோவை; கோவை காந்திபுரம், ராம் நகரை சேர்ந்தவர் பாலமுருகன், 35; கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு கோவை பட்டணம், ஸ்ரீ ராம்தேவ் கார்டனை சேர்ந்த தீபக், 26 என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.தீபக் பஸ், லாரிகளை வைத்து டிரான்ஸ்போர்ட் கம்பெனி நடத்தி வருகிறார். இந்நிலையில், பாலமுருகனிடம் தீபக், ரூ. 50 லட்சம் கடன் கேட்டார். இரண்டு மாதங்களில் திருப்பி தருவதாக உறுதியளித்துள்ளார்.கடந்த மார்ச் மாதம், தனது கம்பெனி பஸ்ஆர்.சி., புக்கை அடமானமாக வைத்து, பாலமுருகனிடம் இருந்து ரூ.45 லட்சம் பணத்தை கடனாக பெற்றார். பணம் தரவில்லை என்றால், பஸ்சை பாலமுருகன் பெயருக்கு மாற்றி, பதிவு செய்து தருவதாகவும் தெரிவித்துள்ளார்.பணம் கொடுத்து இரண்டு மாதங்கள் மேல் ஆகியும், தீபக் பணத்தை திருப்பி தராமல் இருந்துள்ளார். இதனால் பஸ்சை தனது பெயரில், பதிவு செய்து தருமாறு பாலமுருகன் கேட்டார்.தீபக் காலம் கடத்தி வந்தார். பஸ்சை பெங்களூருவில் மறைத்து வைத்து ஏமாற்றி வந்தார்.பாலமுருகன் காட்டூர் போலீசில் புகார் அளித்தார். விசாரணை நடத்திய போலீசார், தீபக் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.