மேலும் செய்திகள்
வெங்கடேச பெருமாள் கோவில் தேர்த்திருவிழா கோலாகலம்
05-Feb-2025
அன்னுார்; கோவை அருகே மொண்டிபாளையம், வெங்கடேச பெருமாள் கோவில் தேரோட்டத்தில் பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர். கோவை மாவட்டம், அன்னுார் அருகே, மொண்டிபாளையம், வெங்கடேச பெருமாள் கோவிலில், 58ம் ஆண்டு தேர்த் திருவிழா கடந்த 4ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 8ம் தேதி வரை, தினமும் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடந்தது. 9 ம் தேதி காலை, அம்மன் அழைத்தலும், சுவாமி திருக்கல்யாண உற்சவமும் நடந்தது.நேற்று காலை 8:00 மணிக்கு வெங்கடேச பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராக தேருக்கு எழுந்தருளினார். காலை 11:45 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. அறநிலையத்துறை அதிகாரிகள், அறங்காவலர்கள், பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். ஏராளமான பக்தர்கள் தேரின் மீது, எலுமிச்சை, பழம், நிலக்கடலை, ஆகியவற்றை வீசி, கோவிந்தா, கோவிந்தா என பக்தி கோஷங்கள் எழுப்பினர். அன்னதானம் வழங்கப்பட்டது. தேரோடும் வீதி வழியாக சென்று தேர் மதியம் 3:00 மணிக்கு நிலையை அடைந்தது. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களிலிருந்து பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர். நாளைஇரவு தெப்ப தேரோட்டம் நடைபெறுகிறது. வரும் 13 ஆம் தேதி காலை 8 : 00 மணிக்கு மகா தரிசனமும், மதியம் மஞ்சள் நீராடுதல் மற்றும் மகா தீபாராதனையுடன் தேர் திருவிழா நிறைவடைகிறது.
05-Feb-2025