கோவை மாநகராட்சிக்கு புது துணை கமிஷனர்
கோவை ;கோவை மாநகராட்சிக்கு, புதிய துணை கமிஷனராக குமரேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழகத்தில் டி.ஆர்.ஓ., அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள், வெவ்வேறு நகரங்களுக்கு இட மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர். துணை கலெக்டர் அந்தஸ்திலான அதிகாரிகளுக்கு, டி.ஆர்.ஓ., பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது.கோவை மாநகராட்சியில் இரண்டு துணை கமிஷனர் பணியிடங்கள் உள்ளன. தற்போது பணிபுரியும் துணை கமிஷனர் சிவக்குமார், மதுரைக்கு இட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியல் இன்று (ஜன., 6) வெளியிட்ட பின், மாநகராட்சி பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவார். இவருக்கு பதிலாக, திருப்பூர் மாநகராட்சி துணை கமிஷனர் சுல்தானா நியமிக்கப்பட்டு உள்ளார். சிவக்குமார் விடுவிக்கப்பட்டதும், இவர் பொறுப்பேற்க உள்ளார்.இன்னொரு பணியிடம், பல மாதங்களாக காலியாக இருக்கிறது. அவ்விடத்துக்கு தற்போது பதவியிறக்கத்தில் துணை கமிஷனராக உள்ள குமரேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர், விடுப்பில் இருக்கிறார். கோவை மாநகராட்சிக்கு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் விரைந்து பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல், மாநகராட்சியில் உள்ள மற்ற காலி பணியிடங்களுக்கான அதிகாரிகளை தமிழக அரசு விரைந்து நியமிக்க வேண்டும்.