| ADDED : டிச 10, 2025 08:27 AM
சூலூர்: குடியிருப்பு பகுதிக்கு அருகிலேயே குப்பையை தரம் பிரித்து பெற்று, உரம் தயாரிக்கும் புது முயற்சியில் இறங்கியுள்ளது, சூலூர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம். சூலூர் ஊராட்சி ஒன்றியத்தில், 17 ஊராட்சிகள் உள்ளன. இதில், காங்கயம் பாளையத்தில் உள்ள விமானப்படைத்தளத்தை சுற்றி, காடம்பாடி, காங்கயம் பாளையம், கலங்கல் ஊராட்சிகள் உள்ளன. பல ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். தினமும் டன் கணக்கில் குப்பை சேகரமாகிறது. பொது இடங்களில் குப்பை கொட்டப்படுவதால், அவற்றை கிளறி உண்ண வரும் பறவைகளால் விமானங்களை இயக்குவதில் பாதிப்பு ஏற்படுவதாக, புகார்கள் உள்ளன. சூலூர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம், ஊராட்சி நிர்வாகம் இணைந்து குப்பை சேகரிப்பதில், புது முயற்சியில் இறங்கியுள்ளன. இதற்கான ஆலோசனை கூட்டம், காடம்பாடியில் நேற்று நடந்தது. ஊராட்சியில் உள்ள குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துராஜூ பேசுகையில், குடியிருப்பு பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில், அந்த குடியிருப்புகளில் உள்ள மக்கள், தரம் பிரித்து தரும் குப்பையை தூய்மை காவலர்கள் பெறுவர். மக்கும் குப்பை, மக்காத குப்பையை அதற்குரிய குழிகளில் போடுவர். மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிப்பர். மக்காத குப்பை, அரசு அனுமதித்துள்ள தனியாருக்கு விற்பனை செய்யப்படும். அதன் வழியாக கிடைக்கும் தொகை, தூய்மை பணியாளருக்கு வழங்கப்படும். இதன் மூலம் ஒரு பகுதியின் குப்பை, வேறு இடத்துக்கு செல்லாது. கிராமமும் தூய்மையாக இருக்கும். உங்கள் ஒத்துழைப்பு தேவை, என்றார்.