உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புதரில் மறைந்த அறிவிப்பு; வாகன ஓட்டுநர்கள் பாதிப்பு

புதரில் மறைந்த அறிவிப்பு; வாகன ஓட்டுநர்கள் பாதிப்பு

ரோட்டில் தேங்கும் மழை நீர்

பொள்ளாச்சி - பல்லடம் ரோட்டில், நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஆங்காங்கே ரோட்டின் ஓரத்தில் மழை நீர் தேங்கி இருப்பதால், வாகன ஓட்டுநர்கள் அவதி அடைந்துள்ளனர். மேலும், தேங்கிய மழை நீரால் கொசு உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம் இதை கவனித்து மழை நீரை வெளியேற்ற வேண்டும்.- -டேனியல், பொள்ளாச்சி.

ஒளிராத தெரு விளக்குகள்

கிணத்துக்கடவு அண்ணா நகர் பகுதியில் கடந்த ஒரு வாரமாக, இரவு நேரத்தில் தெருவிளக்குகள் எரியாததால், இரவு நேரத்தில் நடந்து செல்லும் பயணியர் தடுமாறி செல்லும் நிலை உள்ளது. மேலும், வாகன ஓட்டுநர்களும் சிரமத்துடன் சென்று வருகின்றனர். இதை தவிர்க்க தெரு விளக்குகளை முறையாக ஒளிர செய்ய பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-- -மணி, கிணத்துக்கடவு.

ரோடு சேதம்

பொள்ளாச்சி, நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பாக உள்ள தார் ரோடு ஆங்காங்கே பழுதடைந்து காணப்படுகிறது. இதனால், வாகன ஓட்டுநர்கள் பலர் தடுமாறி கீழே விழுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க இந்த ரோட்டை விரைவில் சீரமைக்க வேண்டும்.- -கார்த்தி, பொள்ளாச்சி.

அறிவிப்பு தெரியல!

வால்பாறை அடுத்துள்ள வாட்டர் பால்ஸ் எஸ்டேட் பகுதியில் இருந்து, வால்பாறை செல்லும் ரோட்டில் எச்சரிக்கை பலகை புதரில் மறைந்துள்ளது. இதனால், வாகன ஓட்டுநர்கள் ரோட்டில் செல்லும் போது எச்சரிக்கை அறிவிப்பு தெரியாததால், விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, நெடுஞ்சாலைத்துறை சார்பில் புதரை அகற்றம் செய்ய வேண்டும்.- -கணேசன், வால்பாறை.

நடைபாதையில் குப்பை

கிணத்துக்கடவு அரசு பள்ளி அருகே உள்ள நடைபாதையில் குப்பை கொட்டி அவ்வப்போது தீ வைத்து எரிக்கின்றனர். இதனால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்படுவதுடன், சுகாதார சீர்கேடு நிலவுகிறது. இதை தவிர்க்க பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-- -ஆறுச்சாமி, கிணத்துக்கடவு.

சுகாதாரம் பாதிப்பு

உடுமலை, பழநி ரோடு காந்திநகர் பஸ் ஸ்டாப் பின்புறம் குப்பை அதிக அளவில் கொட்டப்படுகிறது. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. குப்பையை அகற்ற நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சிவா, உடுமலை.

வேகத்தடை வேண்டும்

உடுமலை, பழனியாண்டவர் நகர் ரவுண்டானா அருகே வாகனங்கள் அதிவிரைவாக செல்கின்றன. மாலை நேரங்களில் அவ்வழியாக நடைபயிற்சி செல்வோர் வேகமாக செல்லும் வாகன ஓட்டுநர்களால் அச்சப்படுகின்றனர். அங்கு வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- வாணி, உடுமலை.

தெருவிளக்குகள் எரிவதில்லை

உடுமலை, தளிரோடு, காந்தி சவுக் பகுதியில் தெருவிளக்குகள் எரியாமல் இருப்பதால், இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியில் சென்று வருவதற்கு சிரமப்படுகின்றனர். இருள் சூழ்ந்திருப்பதால் திருட்டு ஏற்படும் அச்சத்திலும் மக்கள் உள்ளனர்.- நந்தகோபால், உடுமலை.

வாகனங்கள் ஆக்கிரமிப்பு

உடுமலை, பழநி ரோட்டில் சரக்கு வாகனங்கள் ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. போக்குவரத்து இதனால் அடிக்கடி பாதிக்கப்படுகிறது. கனரக வாகனங்கள் செல்லும்போது இரண்டுசக்கர வாகன ஓட்டுநர்கள் ஒதுங்குவதற்கு இடமில்லாமல் தடுமாறுகின்றனர்.- ஜெயந்தி, உடுமலை.

கொசுத்தொல்லை அதிகரிப்பு

உடுமலை, ஆசாத் வீதியில் குப்பைக்கழிவுகள் ரோட்டோரத்தில் கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. காலை நேரங்களில் கொசுத் தொல்லை அதிகரித்து, நோய் பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது.- வெங்கடேஷ், உடுமலை.

தெருநாய்கள் தொல்லை

உடுமலை நகராட்சி முன் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. அவை அவ்வப்போது ரோட்டில் நடந்து செல்வோரை துரத்திச்சென்று கடிக்கின்றன. எனவே, நாய்களை நகராட்சியினர் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சுரேஷ், உடுமலை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை