கல்லுாரிகளில் ஓணம் கொண்டாட்டம்
கோவை; * டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லுாரியில், 'மேளம் 25' எனும் பெயரில், ஓணம் விழா, மாணவர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. டாக்டர் என்.ஜி.பி. ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளை தலைவர் டாக்டர் நல்ல பழனிசாமி தலைமை வகித்தார். மாணவர்கள் அத்தப்பூ கோலமிட்டு, கல்லுாரி வளாகத்தை வண்ணமயமாக அலங்கரித்தனர். கேரள பாரம்பரிய உடைகளில், நடனங்களை ஆடினர். என்.ஜி.பி. கல்விக் குழுமங்களின் செயலர் டாக்டர் தவமணிதேவி, டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லுாரியின் கல்விசார் இயக்குனர் மதுரா, கல்லுாரி முதல்வர் சரவணன், துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். * கருமத்தம் பட்டி, ஏ.எம்.சி. கல்வி நிறுவனங்கள் சார்பில் ஓணம் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மாணவர்கள் கேரள பாரம்பரிய உடைகளில் வந்திருந்தனர். கல்லுாரியின் நிர்வாக இயக்குனர் மற்றும் பார்மஸி கல்லுாரியின் முதல்வர் மோகன், ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் ஓணம் பண்டிகை வலியுறுத்துவதாக கூறினார். மாணவர்கள் ஒன்றிணைந்து வண்ண, வண்ண மலர்களால், அத்தப்பூ கோலமிட்டனர். பல்வேறு கலை நிகழ்வுகளை அரங்கேற்றினர். போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன.