பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடத்த உத்தரவு
பெ.நா.பாளையம்; தமிழ்நாடு பள்ளி கல்வி இயக்ககம் சார்பில், இன்று அனைத்து வகை பள்ளிகளிலும், குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் தடுத்தல் குறித்தான பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.இது தொடர்பாக நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் இன்று நடக்கிறது. இதில், பள்ளி மாணவர்கள் பாதிப்புக்கு உள்ளாகுதல், போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்தல், இது குறித்து பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டத்தில் விவாதித்தல், குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் தடுத்தல் குறித்தான விளக்கக் காட்சி மற்றும் குறும்படம் ஆகியவற்றை காட்சிப்படுத்தல் ஆகியவை கூட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்றன. இதே போல பெரியநாயக்கன்பாளையம், துடியலுார், சின்னதடாகம் வட்டாரங்களில் உள்ள அரசு ஆரம்பப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளிலும் பெற்றோர், ஆசிரியர் கழக கூட்டம் நடக்கிறது.