| ADDED : நவ 21, 2025 06:15 AM
வால்பாறை: வால்பாறையில், ரோட்டில் நடந்து சென்றவர் மாடு முட்டியதால் படுகாயமடைந்தார். வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில், சமீப காலமாக கால்நடைகள் அதிகளவில் நடமாடுகின்றன. இதை கட்டுப்படுத்த நகராட்சி அதிகாரிகளும் போதிய நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் ரோட்டில் செல்பவர்களையும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் மாடுகள் தாக்கி, காயமடைந்து வருகின்றனர். இந்நிலையில், வால்பாறை அடுத்துள்ள ஸ்டேன்மோர் ரோட்டில் செங்குத்துப்பாறை எஸ்டேட்டை சேர்ந்த சக்திவேல்,55, என்பவர் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த மாடு அவரை முட்டி தள்ளியதில், கிழே விழுந்து படுகாயமடைந்தார். சப்தம் கேட்டு ஓடி வந்த பொதுமக்கள் அவரை மீட்டு, வால்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டபின், மேல்சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து வால்பாறை போலீசார் விசாரிக்கின்றனர்.